பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)09. திருவீழிமிழலை467

2897. திக்கமர் நான்முகன் மாலண்ட மண்டலந் தேடிட
  மிக்கமர் தீத்திர ளாயவர் வீழி மிழலையார்
சொக்கம தாடியும் பாடியும் பாரிடஞ் சூழ்தரும்
நக்கர்தந் நாமந மச்சிவா யவ்வென்பார் நல்லரே. 9

2898. துற்றரை யார்துவ ராடையர் துப்புர வொன்றிலா
  வெற்றரை யார்அறி யாநெறி வீழி மிழலையார்
சொற்றெரி யாப்பொருள் சோதிக்கப் பால்நின்ற சோதிதான்
மற்றறி யாஅடி யார்கள்தஞ் சிந்தையுள் மன்னுமே. 10


     9. பொ-ரை:நான்கு திக்குகளையும் நோக்குகின்ற முகங்களையுடைய
பிரமனும், திருமாலும் மேலுள்ள அண்டங்கள் அனைத்திலும், கீழுள்ள
அண்டங்களிலும் முடி, அடி தேட, காணமுடியாவண்ணம், மிகுந்த எழும்
தீப்பிழம்பாய் நின்றவர் திருவீழிமிழலையில் வீற்றிருக்கும் சிவபெருமான்.
அவர் சொக்கு எனப்படும் ஒருவகைத் திருக்கூத்து ஆடியும், பாடியும்
பூதகணங்கள் சூழ விளங்கும் நக்கர், அவருடைய திருநாமமாகிய நமச்சிவாய
என்பதை ஓதவல்லவர்கள் சிவபுண்ணியம் செய்தவராவர்.

     கு-ரை:திக்கு அமர் நான்முகன்-திக்கைப் போல் பொருந்திய நான்கு
முகங்களையுடைய பிரமனும். மாலும் முறையே அண்டம் மண்தலம் தேடத்
திரளாய் மிக்கவர். சொக்கம்-ஒரு கூத்து. நக்கர்-ஆடையில்லாதவர். அவர்
நாமமாகிய திருவைந்தெழுத்தை உச்சரிப்போர் நல்லவர்-சிவபுண்ணியச்
செல்வராவர். நான்முகன் மால். அண்டம் மண்தலம் தேட-நிரனிறை.

     10. பொ-ரை:பொருந்திய காவியாடை அணிந்த புத்தர்களும்,
ஆடையணியாத சுத்தமில்லாச் சமணர்களும் அறியாத நெறியில் விளங்குபவர்
திருவீழிமிழலையில் வீற்றிருக்கும் இறைவர். சொல்லையும், பொருளையும்
கடந்து அருள் ஒளியாக விளங்கும் இறைவர், தம்மைத் தவிர வேறெதையும்
அறியாத அடியார்களின் சிந்தனையில் நிலையாக வீற்றிருப்பார்.

     கு-ரை:துற்று-பொருந்திய. துவர் ஆடையார்-மருதம் தோய்க்கப்பட்ட
ஆடையையுடையவர். துப்புரவொன்றில்லார்-ஒரு பயனும் அறியாதவருமாகிய
சமணர். “துப்புரவில்லார் துணிவு”