பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)10. திருஇராமேச்சுரம்469

10.திருவிராமேச்சுரம்

பதிக வரலாறு:

     “இராமன் இலங்கை செற்ற மிக்க பெரும்பாதகத்தை நீக்கவேண்டி,
திருவிராமேச்சுரத்தைச் சேர்ந்து, செங்கண்மால் வழிபட்ட கோயில் நண்ணி,
மங்கையர்க்கு நாயகியாரும் மெய்ம்மை மந்திரியாரும் சூழ மணிநீர்
வாயில்புக்கு வலங் கொண்டு போற்றிப்பாடியது” இத் திருப்பதிகம்.

                      பண்: காந்தார பஞ்சமம்

ப.தொ.எண்: 268   பதிக எண்: 10

                         திருச்சிற்றம்பலம்

2900. அலைவளர் தண்மதி யோடய லேஅடக் கிஉமை
  முலைவளர் பாகமு யங்கவல் லமுதல் வன்முனி
இலைவளர் தாழைகள் விம்முகா னலிரா மேச்சுரம்
தலைவளர் கோலநன் மாலையன் தானிருந் தாட்சியே. 1


     1. பொ-ரை:கங்கையையும், குளிர்ந்த சந்திரனையும் சடை முடியிலே
அடக்கி, உமாதேவியின் முலைவளர் பாகத்தைக் கூடவல்ல முதல்வனாகிய
சிவபெருமான், நீண்ட மடல்களையுடைய தாழைகள் மலர்ந்துள்ள கடற்கரைச்
சோலையையுடைய இராமேச்சுரத்துள், தலைகளால் ஆகிய அழகிய நல்ல
மாலையை அணிந்து அருளாட்சி செய்கின்றான்.

     கு-ரை:அலை-கங்கையை. குளிர்ந்த சந்திரனைச் சடையின் பக்கத்தே
அடக்கி-தேக்கி. உமைபாகம் கூடவல்ல முதல்வன். கிளை-கொம்பு, மிளார்
முதலிய வேறுமரவகைக் கிருப்பதுபோல தாழை மரங்களுக்கின்மையால் இது
வளர்தாழை யெனப்பட்டது. தழைகளையுடையது-தாழை-நீளல். முதல்உயிர்
நீண்டசொல். விம்மு-தழைத்த. கானல்-கடற்கரைச்சோலை. தலையால் ஆகிய
மிகும் அழகையுடைய நல்ல மாலையையுடையவனாகிய சிவபெருமான்
இருந்து ஆட்சிபுரியும் இடம் இராமேச்சுரம் என்க. அலை-சினையாகு பெயர்.
ஆட்சிசெய்யுமிடத்தை ஆட்சியென்றது தொழிலாகு பெயர்.