பக்கம் எண் :

484திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

 12. திருக்கோட்டாறு

பதிகவரலாறு:

    முத்தமிழ்விரகர் திருநள்ளாற்றை வழிபட்டுச் சென்று திருக்கோட்டாறு சேர்ந்து, போற்றிப் பணிந்து பாடியருளியவற்றுள் ஒன்று இத்திருப்பதிகம்.

                    பண்: காந்தார பஞ்சமம்

ப.தொ.எண்:270   பதிக எண்:12

                   திருச்சிற்றம்பலம்

2921. வேதியன் விண்ணவ ரேத்தநின் றான்விளங்
     கும்மறை
ஓதிய வொண்பொரு ளாகிநின் றானொளி
     யார்கிளி
கோதிய தண்பொழில் சூழ்ந்தழ கார்திருக்
     கோட்டாற்றுள்
ஆதியை யேநினைந் தேத்தவல் லார்க்கல்ல
     லி்ல்லையே.                       1


     1. பொ-ரை: வேதங்களை அருளிச் செய்த சிவபெருமான்
விண்ணோர்களாலும் தொழப்படுகின்றான். அவ்வேதங்களால் போற்றப்படும்
உயர்ந்த பொருளாகவும் விளங்குகின்றான். அழகிய கிளிகள் கொஞ்சும்
குளிர்ச்சியான சோலைகள் சூழ்ந்த அழகான திருக்கோட்டாறு என்னும்
திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஆதிப் பிரானான அவனை நினைந்து
வணங்க வல்லவர்கட்குத் துன்பம் இல்லை.

     கு-ரை: மறை - வேதம், ஓதிய - சொல்லப்பட்ட. ஒண்பொருள் ஆகி
நின்றான். வேதம் - பிரபலசுருதி. ஆதியிற் கூறுவதே ஏனையவற்றினும் சிறந்த
பிரமாணமாகும்.

     ஆகவே அவ்வேதத்தாற் பிரதி பாதிக்கப்பட்ட எவற்றிலும் சிறந்த
பொருள் எனப்படுதலின் மறை யோதிய ஒண்பொருளாகி நின்றான் என்றார்.