பக்கம் எண் :

616திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3143. ஏலமார் தருகுழ லேழையோ டெழில்பெறும்
  கோலமார் தருவிடைக் குழகனா ருறைவிடம்
சாலமா தவிகளுஞ் சந்தனஞ் சண்பகம்
சீலமா ரேடகஞ் சேர்தலாஞ் செல்வமே.        4

3144. வரியணி நயனிநன் மலைமகண் மறுகிடக்
  கரியினை யுரிசெய்த கறையணி மிடறினன்
பெரியவன் பெண்ணினோ டாணலி யாகிய
எரியவ னுறைவிட மேடகக் கோயிலே.         5

3145. பொய்கையின் பொழிலுறு புதுமலர்த் தென்றலார்
  வைகையின் வடகரை மருவிய வேடகத்
தையனை யடிபணிந் தரற்றுமின் னடர்தரும்
வெய்யவன் பிணிகெட வீடெளி தாகுமே.       6


     4. பொ-ரை: மயிர்ச்சாந்து தடவிய மணமிகு கூந்தலையுடைய
உமாதேவியோடு, அழகிய இடபவாகனத்தில் ஏறும் அழகனான சிவபெருமான்
வீற்றிருந்தருளும் இடமான ஆல், மாதவி, சந்தனம், செண்பகம் முதலியன
மிகுந்து விளங்கும் சிறப்புடைய திருவேடகம் சென்று அவனை வழிபட்டால்
செல்வம் பெருகும்.

     கு-ரை: ஏலம் - மயிர்ச்சாந்து. எழில் பெறும் - அழகு உடைய.
கோலம் - தோற்றம். சாலம் - ஆலமரம், சேர்தலாம் செல்வம் - சேர்தல்
செல்வம் ஆம், என மாறிக்கூட்டுக.

     5. பொ-ரை: செவ்வரி படர்ந்த கண்களையுடைய, நல்ல மலை
மகளான உமாதேவி கலங்க, யானையின் தோலை உரித்த, விடம்
அணிகண்டரான, பெருமை மிகுந்தவரான சிவபெருமான், பெண்ணாகவும்,
ஆணாகவும், அலியாகவும் விளங்கும் சோதி உருவினார். அவர்
வீற்றிருந்தருளும் இடமாவது திருவேடகக் கோயிலாகும்.

     கு-ரை: செவ்வரி பரவிய கண்களையுடையவளாகிய, மலை மகள்
கலங்கக் கரியினை உரிசெய்த மிடற்றினான் என்பது முதலிரண்டடியின்
பொருள். கறை - விடக்கறை. எரியவன் - நெருப்பு உருவினன்.

     6. பொ-ரை: குளங்களிலும், சோலைகளிலும் அன்றலர்ந்த
புதுமலர்களின் மணத்தைச் சுமந்து தென்றல் காற்று வீச, வைகை ஆற்றின்