பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)37. திருப்பிரமபுரம்647

3196. செய்யன்வெள்ளிய னொள்ளியார்சில
       ரென்றுமேத்தி நினைந்திட
ஐயனாண்டகை யந்தணனரு
     மாமறைப்பொரு ளாயினான்
பெய்யுமாமழை யானவன்பிர
     மாபுரமிடம் பேணிய
வெய்யவெண்மழு வேந்தியைந்நினைந்
     தேத்துமின்வினை வீடவே.            7


பண்டைக்காலத்தில் தன் திருக்கரத்தில் நெருப்பேந்தியவன் சிவபெருமான்.
தன்னை வழிபடும் அடியவர்கட்குப் பேரின்பத்தை வழங்கும் தன்மையன்.
திருப்பிரமாபுரத்து வீற்றிருந்தருளும் வேதங்களை அருளிச் செய்தவனும்,
மலரை ஒத்த பிறைச் சந்திரனையும், பாம்பையும் அணிந்தவனுமான
சிவபெருமானை எம் தந்தை என்று போற்றி வழிபடுவீர்களாக.

     கு-ரை: வல்வினைக்கு ....... என் (உறுதுணையாய் அவனிருக்கவும்)
எளிதினீங்காத தீவினை நீங்குவதற்கு நீ ஓடியுழல்வது ஏன்? சேர்ந்தாரைக்
கொல்வதாகிய கொடியபொருளும் அவனையடைந்தால் நற்பொருளாகும்.
அவன் என அறிவித்தற்கன்றோ? அக்காலத்தில் அழலை ஏந்தினான்?
மெய்யடியாரோடு பொய்யடியோமையும் ஆட்கொள்பவன் என்பதறிவித்தற்கு
மதியோடு அராவணி எந்தையாயிருந்தான், என்றுகொண்டு நீ ஏத்துவாயாக
என்பது இப்பாசுரத்தின் கருத்து.

     7. பொ-ரை: இறைவன் சிவந்த திருமேனியுடையவன். வெள்ளிமலை
எனப்படும் கயிலைக்கு நாயகன். சிவஞானம் பெற்ற பெருமக்களால்
எக்காலத்திலும் போற்றப்பட்டு வணங்கப்படும் தலைவன். அளவில்லா
ஆற்றலும், எவ்வுயிரிடத்தும் பேரிரக்கமும் உடையவன். அரிய நான்
மறைகளின் உட்பொருளாய் விளங்குபவன். பெய்யும் மழைபோன்றவன்.
திருப்பிரமாபுரத்தில் வீற்றிருந்தருளும் மழுப்படையேந்திய சிவபெருமானை
உங்கள் வினைகள் நீங்க வழிபடுவீர்களாக!

     கு-ரை: பெய்யும் மாமழை ஆனவன். வெண்மழு முன்னும் வந்தது.
வினைவீட - வினை ஒழிய.