பக்கம் எண் :

882திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3539. வல்லைவரு காளியைவ குத்துவலி
       யாகிமிகு தாரகனைநீ
கொல்லென விடுத்தருள் புரிந்தசிவன்
     மேவுமலை கூறிவினவில்
பல்பலவி ருங்கனி பருங்கிமிக
     வுண்டவை நெருங்கியினமாய்க்
கல்லதிர நின்றுகரு மந்திவிளை
     யாடுகா ளத்திமலையே.           3

3540. வேயனைய தோளுமையொர் பாகமது
       வாகவிடை யேறிசடைமேல்
தூயமதி சூடிசுடு காடினட
     மாடிமலை தன்னைவினவில்
வாய்கலச மாகவழி பாடுசெய்யும்
     வேடன்மல ராகுநயனம்
காய்கணை யினாலிடந் தீசனடி
     கூடுகா ளத்திமலையே.           4


     3. பொ-ரை: தாரகன் இழைத்த துன்பம் கண்டு, விரைந்து நீக்கவரும்
காளியை நோக்கி, “வலிமை மிகுந்த தாரகன் என்னும் அசுரனை நீ
கொல்வாயாக” என்று மொழிந்து அருள்செய்த சிவ பெருமான்
வீற்றிருந்தருளும் மலை, பலவகைச் சுவைமிகுந்த பெரிய கனிகளின் சாற்றை
அருந்தி, ஒரே கூட்டமாய் மொய்த்து, மலை அதிரும்படி கருங்குரங்குகள்
விளையாடுகின்ற திருக்காளத்தி மலையாகும்.

     கு-ரை: வல்லைவரு - விரைவிலே வந்த. வகுத்து - நியமித்து.
வலியாகி - வலிமை பொருந்தி. மிகு - மிக்க; (தாருகனை). இருங்கனி
பருங்கி - பெரிய பழங்களின்(சாற்றைக்) குடித்து. மிகவுண்டலை -
மிகவும் உண்டவைகளாகி. இனமாய் நெருங்கி - ஒரே கூட்டமாய் மொய்த்து.
கல் அதிர - மலை அதிரும்படியாக. கருமந்தி - கரிய பெண் குரங்குகள்.
(விளையாடுகின்ற காளத்தி மலை.) மந்தி - பெண் குரங்கின் பொதுப் பெயர்.

     4. பொ-ரை: மூங்கிலைப் போன்ற தோளுடைய உமாதேவியைத் தன்
திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு, இடப வாகனத்தில் ஏறி,