பக்கம் எண் :

894திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3553. கடந்திகழ் கருங்களி றுரித்துமையு
       மஞ்சமிக நோக்கரியராய்
விடந்திகழு மூவிலைநல் வேலுடைய
     வேதியர் விரும்புமிடமாம்
தொடர்ந்தொளிர் கிடந்ததொரு சோதிமிகு
     தொண்டையெழில் கொண்டதுவர்வாய்
மடந்தையர் குடைந்தபுனல் வாசமிக
     நாறுமயி லாடுதுறையே.             6


     6. பொ-ரை: சிவபெருமான் மதம் பொருந்திய கரிய யானையின்
தோலை உரித்து உமாதேவி அஞ்சுமாறு போர்த்திக் கொண்டவர். மனத்தால்
எண்ணுதற்கு அரியவர். பகைவர்கட்குக் கேடு விளைவிக்கும் மூவிலைச்
சூலம் கொண்டவர். வேதங்களை அருளிச் செய்து வேதப்பொருளாகவும்
விளங்குபவர். அப்பெருமான் விரும்பி வீற்றிந்தருளும் இடமாவது ஒளிர்கின்ற
மேனியும், கொவ்வைப் பழம் போல் அழகிய சிவந்த வாயும் கொண்ட
தேவமகளிர் நீரைக் குடைந்து ஆடுவதால் நீர் நறுமணம் கமழும்
சிறப்புடைய திருமயிலாடு துறை என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: கடந்திகழ் - மதம் மிகுந்த. கருங்களிறு - கரிய யானையை.
உரித்து நோக்கு அரியராய் - அரிய அழகு உடையராய். விடம் திகழும் -
விடம் பூசிய. மூவிலை நல்வேல் உடைய - நல்ல மூன்று இலை போலும்
வேலையுடைய.

     வேதியர் - வேதத்தின் பொருளாய் உள்ள சிவபெருமான்.
கிடந்தது - மேனியில் தங்கியதாகி, ஒரு - ஒப்பற்ற, சோதி - ஒளி,
தொடர்ந்து - பற்றி. ஒளிர் பிரகாசிக்கின்ற, தொண்டை -
கொவ்வைப் பழத்தின். மிகுஎழில் - மிகுந்த அாகைக் கொண்ட.
துவர்வாய் - சிவந்த வாயையுடைய.

     மடந்தையர் - தேவ மகளிர். குடைந்தபுனல் - நீராடிய
தண்ணீர். மிகநாறும் (மிகவாசனை) மணக்கும். மயிலாடுதுறை
(உடலில்) சோதியுடைய மடந்தையர் என்றமையால் - தேவ
மடந்தையரென்றும், அவர் ஆடுவதால் - புனல் முன்னைியினும்
மணம் மிக்கதென்றும் பொருள் கொள்ளக்கிடக்கின்றது. மூவிலைய
வேல் - சூலம்.