பக்கம் எண் :

249
 

அவ்வூர் இப்பொழுது கரையேறவிட்ட குப்பம் என்று வழங்கப்பெறுகின்றது. சுவாமிகள் கரையேறி இப்பதிக்கு முதலில் வந்தபோது “ஈன்றாளுமாய்” எனத் தொடங்கும் பதிகம் பாடப்பெற்றது. மங்கண முனிவர் என்பவர் முடங்கிய காலுடைய முயல் வடிவமாகச் சாபமிடப் பெற்றார். அவர் இத்தலத்து இறைவரைப் பூசித்துச் சாபநீக்கம் பெற்றார். இச்செய்தி “முன்னநின்ற முடக்கான் முயற்கருள் செய்து”என்னும் இக்கோயிலுக்குரிய திருஞானசம்பந்தப் பெருந்தகையாரின் திருவாக்கால் புலப்படுகின்றது. இத்தலத்திற்குத் திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று திருநாவுக்கரசர் பதிகம் ஒன்று ஆக இரண்டு பதிகங்கள் இருக்கின்றன. சிதம்பரநாத முனிவர் இயற்றிய தலபுராணமும் தொல்காப்பியர் இயற்றிய கலம்பகமும்இருக்கின்றன. இவைகள் அச்சில் வெளிவந்துள்ளன.

“சிவாய நமவென்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீ பாதிரிப் புலியூரரனே”.

என்னும் அப்பர் பெருமானுடைய திருவாக்கு ‘சிவாயநம’ என்று சொல்லித் திருநீற்றை அணிந்து கொள்ளவேண்டும் என்பதைத் தெரிவிக்கின்றது. “திருந்தா வமணர்தந் தீநெறிப் பட்டுத் திகைத்து முத்திதரும் தாளிணைக்கே சரணம் புகுந்தேன்” என்னும் அவருடைய திருவாக்கு. அவர் சமண சமயத்திலிருந்ததற்கு அகச்சான்றாய் உள்ளது.

இவ்வூரில் திருக்கோவலூர் ஆதீனத்தைச்சேர்ந்த ஒரு மடாலயம் இருக்கின்றது. அது வீர சைவ மடமாகும்.

கல்வெட்டு:

இந்தக்கோயிலில் 21 கல்வெட்டுக்கள் படியெடுக்கப் பட்டுள்ளன கோயில் புதுப்பிக்கப்பட்டபோது அவை அகற்றப்பட்டுச் சிதறிக்கிடக்கின்றன. கட்வெட்டுக்கள் இரண்டைத் தவிர மற்றவை யெல்லாம் சோழர்களுடையனவே. இவை பத்தாம் நூற்றாண்டிலிருந்து பதின்மூன்றாம் நூற்றாண்டுவரையில் வெட்டுவிக்கப்பட்டவையாம். கோப்பரகேசரிவர்மன் காலத்தில் கி.பி. 969 இல் சோமாசியார் 5 பிராமணர்களுக்குக் குடியிருக்க நிலம் தந்ததும், கி.பி.923இல் தாமோதக்கன் ஒற்றியூரான் ஒரு கமுகந்தோட்டம் கொடுத்ததும் நாராயணன் சேந்தன் திருவமிர்தத்திற்காக வேண்டும் முதல் கொடுத்ததும் கண்டிருக்கின்றன. பிறகு இராசகேசரி காலத்தில் (கி.பி.959) ஒரு நந்தா விளக்கிற்காக 96 ஆடுகள் கொடுக்கப்பட்டன.