பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)59.திருமாற்பேறு605

59. திருமாற்பேறு

பதிக வரலாறு:
கச்சிநகர்த் திருமேற்றளி முதலாகச் சடைமுடியார் நிலவியுறையாலயங்கள் ஆர்வமுறப் பணிந்தேத்தி, திருமாற்பேறு வந்தணைந்து தொழுது பாடியருளியவற்றுள் ஒன்று இத்திருப்பதிகம். (தி.12.திருநா.புரா.327.)

திருக்குறுந்தொகை

ப.தொ.எண்:172

பதிக எண்:59

திருச்சிற்றம்பலம்

1662.

பொருமாற் றின்படை வேண்டிநற் பூம்புனல்
வருமாற் றின்மலர் கொண்டு வழிபடும்
கருமாற் கின்னருள் செய்தவன் காண்தகு
திருமாற் பேறு தொழவினை தேயுமே.

1

1663.
ஆலத் தார்நிழ லில்லற நால்வர்க்குக்
கோலத் தாலுரை செய்தவன் குற்றமில்
மாலுக் காரருள் செய்தவன் மாற்பேறு
ஏலத் தான்தொழு வார்க்கிட ரில்லையே.

2


     1. பொ-ரை: போரிடுகின்ற நெறியிற் படைக்கலம் வேண்டி நல்ல பூம்புனல் பாய்ந்துவரும் ஆற்றில் மூழ்கி, மலர் கொண்டு வழிபடுவோனாகிய கருநிறத்துத் திருமாலுக்கு இனிய அருள் செய்தவனுக்குரிய காணத்தக்க திருமாற்பேறு தொழ வினைகள் தேயும்.
     கு-ரை: பொரும் ஆற்றின் - போர்செய்தற்குரிய முறையால். படை - சக்கரமாகிய ஆயுதம். ஆற்றில் வரும்பூம்புனல்மலர் - பொலிவுடைத்தாய் வரும் ஆற்றுத் தண்ணீரும், மலரும். உம்மைத் தொகை. கருமாற்கு - கருநிறம் பொருந்திய திருமாலுக்கு . திருமால் வழிபட்ட தலமாதலை நினைப்பித்தது. காண்தகு - காண்டற்கு இனிதாகிய.
     2. பொ-ரை: கல் ஆலமரத்தின் பொருந்திய நிழலில் நால்வர்க்கு அறம் அழகுபட உரைத்தவனும், குற்றமற்ற திருமாலுக்கு நிறைந்த பேரருள் செய்தவனும் ஆகிய பெருமான் உறையும் திருமாற்பேற்றைப் பொருந்தத் தாம் தொழுவார்க்கு இடர்கள் இல்லை.