| 59. திருமாற்பேறு |
| பதிக வரலாறு: |
| கச்சிநகர்த் திருமேற்றளி முதலாகச் சடைமுடியார் நிலவியுறையாலயங்கள் ஆர்வமுறப் பணிந்தேத்தி, திருமாற்பேறு வந்தணைந்து தொழுது பாடியருளியவற்றுள் ஒன்று இத்திருப்பதிகம். (தி.12.திருநா.புரா.327.) |
| திருக்குறுந்தொகை |
| ப.தொ.எண்:172 | பதிக எண்:59 |
| திருச்சிற்றம்பலம் |
1662. | பொருமாற் றின்படை வேண்டிநற் பூம்புனல் வருமாற் றின்மலர் கொண்டு வழிபடும் கருமாற் கின்னருள் செய்தவன் காண்தகு திருமாற் பேறு தொழவினை தேயுமே. | |
| 1 |
1663. ஆலத் தார்நிழ லில்லற நால்வர்க்குக் கோலத் தாலுரை செய்தவன் குற்றமில் மாலுக் காரருள் செய்தவன் மாற்பேறு ஏலத் தான்தொழு வார்க்கிட ரில்லையே. | |
| 2 |
|
| 1. பொ-ரை: போரிடுகின்ற நெறியிற் படைக்கலம் வேண்டி நல்ல பூம்புனல் பாய்ந்துவரும் ஆற்றில் மூழ்கி, மலர் கொண்டு வழிபடுவோனாகிய கருநிறத்துத் திருமாலுக்கு இனிய அருள் செய்தவனுக்குரிய காணத்தக்க திருமாற்பேறு தொழ வினைகள் தேயும். |
| கு-ரை: பொரும் ஆற்றின் - போர்செய்தற்குரிய முறையால். படை - சக்கரமாகிய ஆயுதம். ஆற்றில் வரும்பூம்புனல்மலர் - பொலிவுடைத்தாய் வரும் ஆற்றுத் தண்ணீரும், மலரும். உம்மைத் தொகை. கருமாற்கு - கருநிறம் பொருந்திய திருமாலுக்கு . திருமால் வழிபட்ட தலமாதலை நினைப்பித்தது. காண்தகு - காண்டற்கு இனிதாகிய. |
| 2. பொ-ரை: கல் ஆலமரத்தின் பொருந்திய நிழலில் நால்வர்க்கு அறம் அழகுபட உரைத்தவனும், குற்றமற்ற திருமாலுக்கு நிறைந்த பேரருள் செய்தவனும் ஆகிய பெருமான் உறையும் திருமாற்பேற்றைப் பொருந்தத் தாம் தொழுவார்க்கு இடர்கள் இல்லை. |