பக்கம் எண் :

618திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்(ஐந்தாம் திருமுறை)

1688.
முன்னும் முப்புரஞ் செற்றன ராயினும்
அன்ன மொப்பர் அலந்தடைந் தார்க்கெலாம்
மின்னு மொப்பர் விரிசடை மேனிசெம்
பொன்னு மொப்பர்புத் தூரெம் புனிதரே.

9

1689.

செருத்த னால்தன தேர்செல வுய்த்திடும்
கருத்த னாய்க்கயி லையெடுத் தானுடல்
பருத்த தோள்கெடப் பாதத் தொருவிரல்
பொருத்தி னார்பொழி லார்ந்தபுத் தூரரே.

10

திருச்சிற்றம்பலம்


   9. பொ-ரை: புத்தூரில் எழுந்தருளியுள்ள இறைவர், முன்னும் மூன்று புரங்களைச் சினந்தவராயினும், வருந்தித் தம்மையடைந்தவர்க்கெல்லாம் அன்னம் போல்வர்; விரிந்த சடை ஒளி விளங்கும் மின்னலென உடையவர்; திருமேனி செம்பொன்னென உடையவர் ஆவர்.
   கு-ரை: முன்னும் - முற்காலத்தும். செற்றனராயினும் - அழித்தனரானாலும். அலந்து - வருந்தி, அடைந்தார்க்கெல்லாம் - அடைந்தவரெல்லார்க்கும். அன்னம் - இளைப்பாற்றும் உணவு - திருவெண்ணீறணிந்த தோற்றத்தால் அன்னத்தை ஒப்பர். விரிசடையால் மின்னலை ஒப்பர். செம்பொன்னும் ஒப்பர் என்க.
   10. பொ-ரை: பொழில்கள் நிறைந்த புத்தூர்த் தலத்திறைவர், பொருதற்குத் தன்னுடைய தேர் செல்லுமாறு செலுத்துகின்ற கருத்தொடு கூடியவனாகிய இராவணன் திருக்கயிலையை எடுக்கலுற்ற போது, அவன் உடலும் பருத்த தோள்களும் சிதைந்து கெடும் படியாகத் தம் திருப்பாதத்து ஒரு திருவிரலைப் பொருத்தியவர் ஆவர்.
    கு-ரை: செருதன்னால் - போரால். தன - தன்னுடையவான. உய்த்திடும் - செலுத்தும். கருத்தனாய் - எண்ணமுடையவனாய்.