என ஞானசம்பந்தர் அருளிச்செய்தமையான் அறிக. ‘தெய்வக் கொள்கையற்ற சமயங்களையும் உன்னை அடைதற்குப் படிவழியாக அமைத்த நீ, சில தெய்வக் கொள்கையுடைய பிற நெறியில் நின்ற என்னை உன்னை அடையுமாறு செய்தல் கூடாதோ’ என்பது கருத்து. இத்திருப்பாட்டு, ‘இவ்வாசிரியர் முதற்கண் மாயோன் நெறியில் நின்று, பின்னர்ச் சிவநெறியை எய்தினார்‘ எனக் கூறுவாரது கூற்றிற்குத் துணைசெய்யும். 9. இத் திருப்பாட்டின் முதல் இரண்டடிகளுட் போந்த பொருளை. ‘‘தக்கனையும் எச்சனையும் தலையறுத்துத் தேவர்கணம் தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்னேடீ’’ (திருச்சாழல்-5.) எனவும், ‘‘நாமகள் நாசி சிரம்பிர மன்பட’’ (திருவுந்தியார்-13.) எனவும் திருவாசகத் துள்ளும் போந்தமை காண்க. ‘எச்ச வன்தலை’ எனவும் பாடம் ஓதுப. ‘‘புருவம் நெறித்தருளிய’’ என்றது, ‘வெகுண்ட’ என்றவாறு. ‘புலித்தோல் ஆடைமேல் அக்குஅணி ஆடஆட ஆடும் சொக்கன்’ என்க. அக்கு அணி - எலும்பு மாலை. சொக்கன்-அழகன். தொடர்தல்-இடைவிடாது பற்றுதல். |