பக்கம் எண் :

32திருவிசைப்பா[ஒன்பதாந்


44.

விண்ணவர் மகுட கோடி
   மிடைந்தொளி மணிகள் வீசும்
அண்ணல்அம் பலவன் கொற்ற
   வாசலுக் காசை யில்லாத்
தெண்ணரைத், தெருள உள்ளத்
   திருளரைத், திட்டை முட்டைப்
பெண்ணரைக் காணா கண்; வாய்
   பேசாதப் பேய்க ளோடே.                    (10)
 

45.

சிறப்புடை அடியார் தில்லைச்
   செம்பொன்அம் பலவற் காளாம்
உறைப்புடை அடியார் கீழ்க்கீழ்
   உறைப்பர்சே வடிநீ றாடார்
இறப்பொடு பிறப்பி னுக்கே
   இனியராய் மீண்டும் மீண்டும்
பிறப்பரைக் காணா கண்; வாய்
   பேசாதப் பேய்க ளோடே.                    (11)
 

திருச்சிற்றம்பலம்
 


44.    ‘வீசும் வாசல்’ என இயையும். வாசல், ‘வாயில்’  என்பதன்
மரூஉ.  தெண்ணர்,  ‘திண்ணர்’  என்பதன்  மரூஉ’  ‘மூர்க்கர்’ எனப்
பொருள்    தந்தது.   ‘‘தெண்ணர்   கற்பழிக்   கத்திரு  உள்ளமே’’
(திருமுறை-3, 47, 3) என வந்தமை காண்க. ‘உள்ளத்து இருளர்’ என்க.
‘திட்டை,   முட்டை’   என்பன:  பகுப்பற்ற  பிண்டத்தை  உணர்த்தி
நின்றன.  ‘‘பெண்ணர்’’  என்பதற்கு,  ‘‘பேடர்’’ என்றதற்கு உரைத்தது
உரைக்க.

45. சிறப்பு-யாவரினும் உயர்ந்து நிற்கும் மேன்மை. உறைப்பு-உறுதி.
‘சிறப்புடை அடியாராகிய; உறைப்புடை அடியார்’ எனவும்,‘உறைப்புடை
அடியார்க்குக்  கீழ்க்கீழாய் உறைத்தலாவது சேவடி’  எனவும் உரைக்க.
கீழ்க்கீழாய்   உறைப்பவரது,   அடியார்க்கு   அடியராயும், அவர்க்கு
அடியராயும்  நிற்றலில்  உறுதியுடையராதல், ‘‘நீறு’’ என்றது, புழுதியை.
பிறப்பர்-பிறப்பவர்.