பக்கம் எண் :

திருமுறை]4. கோயில்31


42.

செக்கர்ஒத் திரவி நூறா
   யிரத்திரள் ஒப்பாந் தில்லைச்
சொக்கர்,அம் பலவர் என்னும்
   சுருதியைக் கருத மாட்டா
எக்கரைக், குண்டாம் மிண்ட
   எத்தரைப் புத்த ராதிப்
பொக்கரைக் காணா கண்; வாய்
   பேசாதப் பேய்க ளோடே.                     (8)
 

43.

எச்சனைத் தலையைக் கொண்டு
   செண்டடித் திடபம் ஏறி
அச்சங்கொண் டமரர் ஓட
   நின்றஅம் பலவற் கல்லாக்
கச்சரைக் கல்லாப் பொல்லாக்
   கயவரைப் பசுநூல் கற்கும்
பிச்சரைக் காணா கண் ; வாய்
   பேசாதப் பேய்க ளோடே.                    (9)
 

42.     செக்கர்-செவ்வானம்.  உவமை   இரண்டற்கும்  பொருள்,
அம்பலவர்.   சொக்கர்-அழகர்.   ‘சொக்கராகிய  அம்பலவர்’  என்க.
சுருதி-வேதப்பொருள்;    ஆகுபெயர்.   எக்கர்- செருக்கு   மிக்கவர்.
‘‘எக்கராம்  அமண் கையர்’’ (திருமுறை 3,  39,  11,) என வந்தமை
காண்க.   குண்டு   -   கீழ்   இனம்.  ‘குண்டர்’  என்பதும்  பாடம்.
மிண்டர்-வன்கண்ணர். எத்தர்-வஞ்சிப்பவர். பொக்கர்-பொய்யர்.

43.     செண்டடித்து-பூச்செண்டு அடித்தல்போல  அடித்து; இஃது
எளிதில்  செய்தமையை  உணர்த்திற்று.  ‘‘இடபம்  ஏறி’ , என்றதனை
முதற்கண்  வைத்து  உரைக்க.  ‘‘ஏறி’’  என்ற  எச்சம் எண்ணின்கண்
வந்தது.  ‘‘அம்பலவன்’’ என்றது ஆகுபெயராய் அவனைப் பொருளாக
உடைய   நூலைக்  குறித்தது.  கல்லா-கற்காத.  ‘கைத்தவர்’  என்பது,
‘கச்சவர்’  என்று  ஆகி,  ‘கச்சர்’  என  இடைக்  குறைந்து  நின்றது;
வெறுக்கப்பட்டவர்    என்பது   பொருள்.   ‘‘பசு’’   என்றது,   சிறு
தெய்வங்களை,  நூல், அவற்றைப் பொருளாக உடைய நூல். ‘‘கற்கும்’’
என்றது, ‘‘விரும்பிக் கற்கும்’ என்றவாறு, பிச்சர்-பித்தர்.