பக்கம் எண் :

46சேந்தனார் திருவிசைப்பா[ஒன்பதாந்


66.

மானேர் கலைவளை யுங்கவர்ந்
   துளங்கொள்ளை கொள்ள வழக்குண்டே
தேனே அமுதேஎன் சித்தமே
   சிவலோக நாயகச் செல்வமே
ஆனேஅ லம்பு புனற்பொன்னி
   அணிஆ வடுதுறை அன்பர்தம்
கோனேநின் மெய்யடி யார்மனக்
   கருத்தை முடித்திடுங் குன்றமே.                 (9)
 

67.

குன்றேந்தி கோகன கத்தயன்
   அறியா நெறிஎன்னைக் கூட்டினாய்
யென்றேங்கி ஏங்கிஅ ழைக்கின்றாள்
   இளவல்லி எல்லைக டந்தனள்
அன்றேஅ லம்ப புனற்பொன்னி
   அணிஆ வடுதுறை யாடினாள்
நன்றே யிவள்நம் பரமல்லள்
   நவலோக நாயகன் பாலளே.                   (10)
 

66. மான் - மான்போன்றவளாகிய என்மகளது. ஏர் கலை - அழகிய
உடை.   வழக்கு  உண்டே  -  நீதி  உண்டோ.  ஆனே  அலம்பு  -
ஆக்களே,  ஒலிக்கின்ற;  ஆவடுதுறை  என்க.  ‘‘ஆனே’’  என்றதனை
இறைவனுக்கு  ஏற்றி உரைப்பாரும், ‘அவ்விடத்தே’ என  உரைப்பாரும்
உளர்.  ‘ஆவடு  துறைக் குன்றமே’ என இயைக்க.  இப்பாட்டு முழுதும்
செவிலி கூற்று.

67.   குன்றேந்தி - கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்தியவன்;
திருமால்.  கோகனகத்து  அயன் - தாமரை மலரில் இருக்கும்  பிரமன்.
இவ்விருவரும்  அறியா  நெறி,  சிவஞான  நெறி.  எல்லை  -  உலக
முறைமை.   ‘பொன்னியை   ஆவடுதுறைக்கண்   ஆடினாள்’   என்க.
‘ஆடினாள்  ;  அன்றே  இவள்  நம்பரம் அல்லள்; நன்றே  நவலோக
நாயகன்  பாலளே’  எனக்  கூட்டுக.  பரம் - சார்பு. நவம்  - புதுமை;
இங்கு வியப்பைக் குறித்தது.