பக்கம் எண் :

56கருவூர்த் தேவர் திருவிசைப்பா[ஒன்பதாந்


81.

இவ்வரும் பிறவிப் பௌவநீர் நீந்தும்
   ஏழையேற் கென்னுடன் பிறந்த
ஐவரும் பகையே யார்துணை யென்றால்
   அஞ்சலென் றருள்செய்வான் கோயில்
கைவரும் பழனம் குழைத்தசெஞ் சாலிக்
   கடைசியர் களைதரு நீலம்
செய்வரம் பரும்பு பெரும்பற்றப் புலியூர்த்
   திருவளர் திருச்சிற்றம் பலமே.                 (2)
 

82.

தாயினே ரிரங்குந் தலைவவோ என்றும்
   தமியனேன் துணைவவோ என்றும்
நாயினேன் இருந்து புலம்பினால் இரங்கி
   நலம்புரி பரமர்தங் கோயில்
வாயினே ரரும்பு மணிமுருக் கலர
   வளரிளஞ் சோலைமாந் தளிர்செந்
தீயினே ரரும்பு பெரும்பற்றப் புலியூர்த்
   திருவளர் திருச்சிற்றம் பலமே.                 (3)
 

81.   ‘இப் பௌவநீர்’ என இயைத்து, ‘நீந்துதற்கரிய   பிறவியாகிய
கடல்நீரை   நீந்துகின்ற   ஏழையேனுக்கு’   என   உரைக்க.   ஐவர்
ஐம்பொறிகள்.              ‘உடன்பிறந்தோர்       அனைவருமே
பகையாய்விட்டமையின்  எனக்கு யார் துணை’ என்றவாறு.  கை வரும்
பழனம்-பக்கங்களில் பொருந்தியுள்ள வயல்களில்,   குழைத்த-தளிர்த்த.
செஞ்சாலி-செந்நெற்  பயிர்.  ‘நீலப் பூக்களின் கொடிகளே களைகளாய்
உள்ளன’  என்றபடி-செய் வரம்பு அரும்பு-வயல்களின்   வரப்புக்களில்
காணப்படுகின்ற.

82.   ‘‘தாயின்’’ என்றதில் இன், சாரியை. இனி இதனை உருபாக்கி,
‘நேர்  நின்று  இரங்கும்’ என உரைத்தலும் ஆம். ‘‘தலைவ, துணைவ’’
என்ற  விளிகட்குப்  பின்னர்  நின்ற  ஓகாரங்கள்  முறையீடு குறித்து
நின்றன.   வாயின்   ஏர்   அரும்பு-மகளிரது   வாய்போல  எழுச்சி
விளங்குகின்ற.  மணி  முருக்கு-அழகிய  முருக்க  மலர்.  நேர் தீயின்
அரும்பு-அதன் எதிராக நெருப்புப்போலத் தோன்றுகின்ற.