திருச்சிற்றம்பலம்
ஒளி வளர்-எவ்விடத்திலும் ஒளி பரத்தற்கு ஏதுவான. திருமணிச் சுடர்-அழகிய இரத்தினங்களின் ஒளி. கான்று-உமிழ்ந்து. சூழல்-இடம். ‘சூழல் எறி’ என இயையும். ‘சூழலாய்’ என ஆக்கம் வருவிக்க. அங்கெல்லாம்-தன் இடமெல்லாம். வம்பு உலாம் கோயில்-புதுமை பொருந்திய தலைமை வாய்ந்த இல்லங்களும். வளர் நிலை-உயர்ந்த பல நிலைகளையுடைய. செம்பொனால் அரும்பு-சிவந்த பொன்னால் இயன்று தோன்றுகின்ற. 90. பரவை சூழ் அகலம்-கடல் சூழ்ந்த அகன்ற பூமி. அம் கண்-‘அழகிய கண்’ எனப்படும் அறிவு. ‘எண்ணில் புன்மாக்கள்’ எனவும், ‘புன்மாக்கள் அறிவுறு தமிழ்மாலை’ எனவும் இயைக்க. திருந்து உயிர்ப் பருவத்து அறிவு உறு-திருந்துகின்ற உயிரின் பரிபாக நிலையில் ஞானம் பெறுதற்கு ஏதுவான ( தமிழ்மாலை என்க). கருவூர்த் தேவரை, ‘‘கருவூர்’’ என்றது உபசாரம். துறை-புறப்பொருள் துறை ; கடவுள் வாழ்த்துப் பகுதி. ‘தமிழ் மாலையைப் பொருந்துகின்ற அரிய கருணையை யுடைய பரமர்’ என்க. பொருந்துதல்-உளங் கொண்டு ஏற்றல். செருந்தி, ஒருவகை மரம். |