பக்கம் எண் :

திருமுறை]9. கோயில்63


94. 
 

பழையராந் தொண்டர்க் கெளியரே; மிண்டர்க்
   கரியரே; பாவியேன் செய்யும்
பிழையெலாம் பொறுத்தென் பிணிபொறுத் தருளாப்
   பிச்சரே; நச்சரா மிளிருங்
குழையராய் வந்தென் குடிமுழு தாளுங்
   குழகரே; ஒழுகுநீர்க் கங்கை
அழகரே; ஆகில் அவரிடம் களந்தை
   அணிதிகழ் ஆதித்தேச் சரமே.                  (4)
 

95.

பவளமே மகுடம் ; பவளமே திருவாய்;
   பவளமே திருவுடம் பதனில்
தவளமே களபம்; தவளமே புரிநூல்;
   தவளமே முறுவல்; ஆ டரவந்
துவளுமே; கலையும் துகிலுமே யொருபால்;
   துடியிடை இடமருங் கொருத்தி
அவளுமே; ஆகில், அவரிடங் களந்தை
   அணிதிகழ் ஆதித்தேச் சரமே.                  (5)
 

94.     பழையராந்   தொண்டர்-நெடுங்காலமாகத்     தொண்டு
செய்துவருபவர்.  மிண்டர்-வன்கண்மை  யுடையவர்.  ‘‘பிணி’’ என்றது
வினையை, ‘எனது குற்றமான செயலைப் பொருட்படுத்தாது நீக்குதலும்,
அவ்வாற்றால்  எனக்கு வினை உண்டாகாமல் தடுத்தலும் செய்யாதவர்’
என்றபடி.   இதனால்,   இவ்வாசிரியர்   தமது   வினையால்  தமக்கு
உண்டாகிய     துன்பத்தை     உணர்ந்திருந்தமை    பெறப்பட்டது.
குழகர்-இளையவர். கங்கை அழகர்-கங்கையை அணிந்த அழகர்.

95.     ‘முடியும்,  வாயும்,  மேனியும்  செந்நிற     முடையன  ;
திருமேனிமேற்     பூச்சும்,     முப்புரி    நூலும்,     புன்னகையும்
வெண்ணிறமுடையன’  என்றவாறு.  தவளம்-வெண்மை.  களபம்-பூசும்
சாந்து    ;    சிவபெருமான்   பூசிக்கொள்ளும்   சாந்து   திருநீறே.
துவளும்-நெளியும்.  ‘‘கலை’’ எனப் பொதுப்படக் கூறியது ‘தோலாடை’
என்றற்கு.  துகில்-நல்லாடை. ‘‘ஒருபால்’ என்றாராயினும், ‘ஓரொருபால்’
என்பது கருத்தென்க. ஒருத்தி-ஒப்பற்றவள். இடமருங்கில்  துடிபோலும்
இடையை   உடைய   ஒப்பற்றவளாகிய  அவளும்  இருப்பாள்’  என
உரைக்க.