பக்கம் எண் :

திருமுறை]10. திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம்69


104.

தெள்ளுநீ றவன்நீ றென்னுடல் விரும்பும்;
   செவிஅவன் அறிவுநூல் கேட்கும்;
மெள்ளவே அவன்பேர் விளம்பும்வாய் ; கண்கள்
   விமானமே நோக்கிவெவ் வுயிர்க்கும் ;
கிள்ளைபூம் பொதும்பிற் கொஞ்சிமாம் பொழிற்கே
   கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வள்ளலே, மணியம் பலத்துள் நின்றாடும்
   மைந்தனே என்னும்என் மனனே.               (4)
 

105.

தோழி யாம் செய்த தொழில்என் எம்பெருமான்
   துணைமலர்ச் சேவடி காண்பான்
ஊழிதோ றூழி உணர்ந்துளங் கசிந்து
   நெக்குநைந் துளங்கரைந் துருக்கும்
 

104.     தெள்ளு - தெளிவாகிய ; வெண்மையான. ‘நீற்றவன்’ என
வருதலேயன்றி,    ‘நீறவன்’    என   வருதலும்   இலக்கணமேயாம்.
இரண்டாவதன்  தொகையோடொப்பதாதலின். ‘‘கானக நாடனை நீயோ
பெரும்’’  (புறம்-5.)  ‘‘நாடன்  என்கோ  ஊரன் என்கோ’’  (-  -49.)
என்றாற்போல்வன   பலவற்றுள்ளும்   ‘நாடனை.  நாடன்’   முதலாக
வருவன பலவுங்காண்க. ‘நீறவன்’ என்பது, ‘சிவன்’ என்னும்  அளவாய்
நின்றது.‘‘என்’’  என்பது,  ‘‘செவி’’  முதலிய  பலவற்றோடும்  சென்று
இயையும்.  அவன்  அறிவு  நூல்-அவனை அறியும் அறிவைத்  தரும்
நூல்.  மெள்ள விளம்புதல்-செபித்தல். விமானம்-மூலத்தான  மாளிகை.
வெவ்வுயிர்க்கும்-வெப்பமாக  மூச்செறியும்,   சோர்வுறுதலை   இனிது
விளக்க,  மூக்கின் தொழிலாகிய  உயிர்த்தலைக்  கண்களுக்கு  ஏற்றிக்
கூறினார். ‘பொழிற்கண்  என்பது, ’’பொழிற்கு’’ என உருபு மயக்கமாய்
வந்தது. என்னும்-என்று நினைக்கும்.

105.     ‘தோழி, மணியம்பலவனைக் காண்பான் இருவர் கேழலும்
புள்ளுமாகி  நின்று  மயங்கவும், யாம் மால் ஒழியோம் ; எம் உள்ளம்
ஊழிதோறூழி அவனை உணர்ந்தமையால் அஃது இப்பிறப்பில் கசிந்து
நெக்கு  நைந்து  கரைந்து  உருகாநின்றது ; ஆயினும், யாம் அவனது
துணைமலர்ச்  சேவடி  காண்பான் செய்த தொழில் என்’ எனக் கூட்டி
உரைக்க.

‘‘தொழில்’’  என்றது,    பணியை.     ‘‘என்’’   என்றது, யாதும்
இன்மையைக் குறித்து நின்றது. மனம் உருகினும் பணியின்றி