பக்கம் எண் :

திருமுறை]19. கோயில்129


187.

அல்லியம் பூம்பழனத் தாமூர்நா வுக்கரசைச்
செல்லநெறி வகுத்த சேவகனே! தென்றில்லைக்
கொல்லை விடையேறி கூத்தா டரங்காகச்
செல்வ நிறைந்தசிற் றம்பலமே சேர்ந்தனையே         (3)
 

188.

எம்பந்த வல்வினைநோய் தீர்த்திட் டெமையாளும்
சம்பந்தன் காழியர்கோன் றன்னையும்ஆட்கொண்டருளி
அம்புந்து கண்ணாளுந் தானும்அணி தில்லைச்
செம்பொன்செய் அம்பலமே சேர்ந்திருக்கை யாயிற்றே.  (4)
 

189.

களையா உடலோடு சேரமான் ஆரூரன்
விளையா மதம்மாறா வெள்ளானை மேல்கொள்ள
முளையா மதிமுடி மூவா யிரவரொடும்
அளையா விளையாடும் அம்பலம்நின் ஆடரங்கே.      (5)
 


187.     அல்லி-அகஇதழ். பழனம்-வயல். ஆமூர்-திருவாமூர்.  இது
திருநாவுக்கரசர்    திருவவதாரம்    செய்த   தலம்.    ‘‘நாவுக்கரசை’’
என்றதனை.  ‘நாவுக்கரசுக்கு’  எனத்  திரிக்க.  ‘கொல்விடை’   என்பது
ஐகாரம்  பெற்று  நின்றது.  கொல்விடை  போலும்  விடை   என்றபடி.
கொல்விடை,   விடலையர்  தழுவுதற்  பொருட்டு  ஆயர்   இனத்தில்
வளர்க்கப்படுவன. விடை ஏறீ-இடபத்தை ஊர்பவனே.

188.    ‘எம் வினைநோய்’ என இயையும், ‘பந்த வினை வல்வினை’
எனத்    தனித்தனி   இயைக்க.    பந்தம்-கட்டு.   திருப்பதிகங்களை
வினைதீர்தற்கு    வழியாகத்      திருக்கடைக்காப்பு   அருளிச்செய்து
சென்றமையின், ‘‘எம் பந்த வல்வினைநோய்  தீர்த்திட்ட எமை ஆளும்
சம்பந்தன்’’ என்றார். அம்பு உந்து-அம்புபோலப்  பாய்கின்ற. ‘‘தானும்’’
எனப் படர்க்கையாகக் கூறினார். ‘‘தான்’’ என்றது,  கூத்தப்பெருமானை.
இடரின்றி உணர்த்தும் என்க. ‘கண்ணாளும் தானும்  சேர்ந்து இருக்கை
தில்லை  அம்பலமே ஆயிற்று’ என மாறிக் கூட்டுக. ‘செம்பொன்னால்’
என உருபு விரிக்க. இருக்கை-இருக்கும் இடம்.

189.     ‘சேரமானொடு’  என  உடனிகழ்ச்சிப்  பொருளில்  வரும்
ஓடுவுருபு விரிக்க. ‘மதம் விளையா’ என மாற்றுக.  விளையா-விளைந்து;
பெருகி.  மாறா-நீங்காத.  மேற்கொள்ள-ஏறிச் செல்லும்படி.  முளையாம்
-இளைதாகிய. அளையா-