பற்றுக்கோடு ‘எனக்கு அவ்வாறு ஆகாதொழிந்தமையால்; என்க. ‘அண்ணல்’ என்பது னகர ஈறாய்த் திரிந்து விளியேற்பது பிற்கால வழக்கு. அண்ணல்-பெருமை யுடையவன்; தலைவன். அண்ணாந்து-ஆகாயத்தை நோக்கி நின்று. அலமந்து-வருந்தி. 212. ‘‘வாடா’’ என்பது, ‘செய்யா’ என்னும் வினையெச்சம். ‘வாடி,பிதற்றி, நினைந்து, உருகிச் செய் குற்றேவல், என்க. வாய் நா-வாயின்கண் உள் நாவால் ‘செய் வீடாம் குற்றேவல்’ என மாறுக. வீட்டிற்கு ஏதுவாவதனை, ‘‘வீடாம்’’ என்றார். குற்றேவல்-சிறு பணிவிடை. எற்று-என்ன பயனை உடையது. ‘உன்னை அடைவதையே பயனாக உடையது’ என்பது குறிப்பு. இதனால், இவர் உலகப் பயன் கருதி இறைவனுக்குத் தொண்டு செய்யாமை பெறப்பட்டது. இது பொய்யிற்கூடாமே-இக் குற்றேவல் பொய்யின்கண் பொருந்தாதவாறு; ‘பழுதாகாதபடி’ என்றவாறு. ‘கூடாமே நாடாய்’ என இயையும். ‘‘கைவந்து’’ என்றதில் கை, இடைச்சொல். ‘யான் வந்து உன்னைக் குறுகுமாறு நாடாய்’ என மாற்றிக் கூட்டுக‘ நாடாய்-நினைந்தருள். 213. ‘‘வாளா’’ என்றது, ‘வழிபடுதலைச் செய்யாது’ என்னும் பொருட்டு. ‘புக்க ணைந்து புரிந்தல ரிட்டிலர்’’என்பது முதலாக இலிங்கபுராணத் திருக்குறுந்தொகையுள் திருநாவுக்கரசர் அருளிச் செய்தல் அறிக. மாலுக்குரிய, ‘‘வீழ்ந்து’’ என்பதன்பின், அயனுக்குரிய, ‘பறந்து’ என்பது வருவிக்க. ‘‘மாண்பு’’ என்றது, அதனையுடைய திருமேனியை உணர்த்திற்று. கூத்தப் பெருமான் திருமேனியும் மாலயன் பொருட்டுத் தோன்றிய வடிவின் வேறல்லவாகலின் ‘மால் அயன் காண்பரிய மாண்பினதாகிய இதனை’ என்றார். தோளாரத் தொழுதல், |