பக்கம் எண் :

166திருவாலியமுதனார் திருவிசைப்பா[ஒன்பதாந்


250.

அரிவையோர் கூறுகந்தான் அழ
   கன்எழில் மால்கரியின்
உரிவைநல் லுத்தரியம் உகந்
   தான்உம்ப ரார்தம்பிரான்
புரிபவர்க் கின்னருள்செய் புலி
   யூர்த்திருச் சிற்றம்பலத்
தெரிமகிழ்ந் தாடுகின்ற எம்
   பிரான்என் இறையவனே.                      (4)
 

251.

இறைவனை என்கதியை என்னு
   ளேயுயிர்ப் பாகிநின்ற
மறைவனை மண்ணும்விண்ணும் மலி
   வான்சுட ராய்மலிந்த
சிறையணி வண்டறையுந் தில்லை
   மாநகர்ச் சிற்றம்பலம்
நிறையணி யாம்இறையை நினைத்
   தேன்இனிப் போக்குவனே !                    (5)
 


250.     மால்   கரி-   பெரிய  யானை.   உத்தரியம்-மேலாடை.
புரிபவர்-விரும்புபவர்.  ‘இன்னருள்செய்  எம்பிரான்’   என இயையும்.
இறைவன்-தலைவன்.  ‘‘இறையவனே’’  என்னும்  ஏகாரத்தைப் பிரித்து,
‘‘எம்பிரான்’’ என்றதனோடு கூட்டுக.

251. கதி-புகலிடம்.‘‘என்னுளே உயிர்ப்பாய்... .. ..நிற்கும்’’ என்ற
அப்பர்  திருமொழி  இங்கு  நோக்கத்தக்கது  (5-21-1.) மறை-மறைந்து
நிற்கும்  பொருள்.  ‘துறைவன்’ என்பதுபோல, ‘‘இறைவன்,  மறைவன்’’
என்றவற்றில்  வகரம்  பெயர்  இடைநிலை.  ‘இறையனை, மறையனை’
எனப்  பாடம்  ஓதுதல்  சிறக்கும். மலி-மகிழ்தற்கு ஏதுவான. ‘சுடராய்
அணியாம்  இறை’  எனவும்,  ‘மலிந்த  வண்டு’  எனவும்   இயையும்.
மலிந்த-நிறைந்த,     சிறை     அணி-சிறகைக்        கொண்டுள்ள,
‘சிற்றம்பலத்துக்கு’  எனத்  தொகுக்கப்பட்ட  உருபை  விரிக்க.  நிறை
அணி-மிக்க  அழகு.  போக்குவனே-என்  உள்ளத்தினின்றும் போக்கி
விடுவேனோ; ‘மறப்பேனோ’ என்றபடி.