276. முத்தர்-இயல்பாகவே பாசங்கள் இல்லாதவர். முதுபகல்-முற்றிய பகல்; நண்பகல். பத்தர் பலி இடுக-அன்பராய் உள்ளார் பிச்சை இடுவார்களாக. எங்கும்-எனது உருவம் முழுதும். ‘இல்லில் வந்து என்னை முழுதும் நோக்குதல் பற்றி இவர் நமக்கு அருளுவார் என்று கருதி யான் இவர் தம் மன்றிற்குச் சென்றால், என்னைச் சிறிதும் கடைக்கணிக்கின்றிலர்’’ என்பாள். ‘‘இல்புகுந்து பார்க்கின்றார்; ஆடுங்கால் நோக்கார்’’ என்றாள். ‘இஃது இவர் வஞ்சகச் செயல்போலும்’ என்றவாறு. இறைவனது திருவருளைப்பெற விரைவார் இறைவனை இங்ஙனம் கூறுதல் இயல்பு என்க. 277, ‘‘மாற்கு ஆழி ஈந்து’’ என்பதை, ‘‘நிந்தித்து‘‘ என்பதன் பின்னர்க் கூட்டுக. நோக்காத தன்மையால்-நீ எம்மை முதற்கடவுள் என்று மதித்தலைச் செய்யாத காரணத்தால். யாம் நோக்கிலோம் என்று- நாம் உன்னை நம் அடியவருள் ஒருவனாகக் கருதி இரங்கிலோம் என்று சொல்லி. மலரோன்-பிரமன். அவனை நிந்தித்தமை. அவனது நடுத்தலையை உகிரால் அறுத்தமை. ‘திருமாலுக்கு ஆழி (சக்கரம்) ஈந்ததும், அறக் கடவுளை ஊர்தியாகக் கொண்டதும் அவர்களது வழிபாட்டினால்’ என்பது பிரமனுக்குக் கூறிய குறிப்புப் பற்றி வருவித்துக்கொள்ளப்படும். ஊர்க்கே வந்து - ஊரினுள் தானே வந்து, ‘வழிபடுபவர்க்கு அளியும், வழிபடாதோர்க்குத் தெறலும் செய்கின்ற இவர் வழிபாடுடைய என்மாட்டுத் தெறலைச் செய்கின்றது என்றோ’ என்பதாம். |