உறவாயபத்தர்கள்’ என உயர்திணை முறைக்கிழமைப்பொருட்டு. பத்தர்கள்-அடியார்கள். வஞ்சகர்-அடிமை செய்ய ஒருப்படாதவர்கள். ‘‘போய் அகல’’ என்றது ஒருபொருட் பன்மொழியாய், ‘இல்லாதொழிய’ எனப் பொருள் தந்தது. ‘அகலப்புகுந்து’ என இயையும். எனவே, வஞ்சகர்க்குத் திருமன்றத்தைச் சேர்தல் வாயாமை பெறப்பட்டது. ‘பொன்னின் மண்டபம், செய்மண்டபம்’ எனத் தனித் தனி இயைக்க. பொன்னின் மண்டபம்-பொன்னால் இயன்ற மண்டபம்; என்றது, கூத்தப் பெருமானது திருச்சபையை. இன், சாரியை. செய் மண்டபம்-சிறப்பாகச் செய்யப்பட்ட மண்டபம். புவனி-புவனம்; உலகம். விளங்க-நிலைபெறுமாறு. ‘விளங்க நின்று’ என ஒரு சொல் வருவிக்க. அடியோமுக்கு-அடியேங்கட்கு; என்றது. அடியவர் அனைவரையும் உளப்படுத்து. ‘அடியோமுக்கு அருள் புரிந்து’ என்றது. ‘திருக்கூத்தியற்றி’ என்றவாறு. பின்னைப் பிறவி-மேல்வரும் பிறவி. அறுக்க-நாங்கள் அறுத்துக் கொள்ளும்படி. நெறி-அதற்குரிய வழி; என்றது. திருவடி ஞானத்தை. ‘‘தந்த பித்தற்கு’’ எனச் சுருங்க ஓதினாராயினும், தந்தான்; அப்பித்தற்கு என இருதொடராக உரைத்தல் கருத்தென்க. பல்லாண்டு-பல்லாண்டு வாழ்க என வாழ்த்தும் வாழ்த்தினை. ‘உமைகோன், மண்டபத்துள்ளே புகுந்து விளங்க நின்று அருள்புரிந்து நெறிதந்தான்; அவனைப் பல்லாண்டு வாழ்க என வாழ்த்துவோமாக’ என்பது இதன் திரண்ட பொருள். இதன் ஈற்றடி ஒருசீர் மிக்கு வந்தது. 290. மிண்டு மனம்-திணிந்த மனம்; உருகாத மனம். ‘மனத்தவராயினார், அடியார்களாயினார்’ என இரண்டிடத்தும் ஆக்கச்சொல் வருவிக்க. ‘‘போமின்கள்’’ என்றது, அவர் இசையார் என்பதுபற்றி, ‘‘ஈசற்கு’’ எனப் பின்னர் வருகின்றமையின், வாளா, ‘‘கொண்டும் கொடுத்தும்’’ என்றார். ஈசன் |