மங்கையர் கொங்கையில் உள்ள குங்குமம் காமுகரை வசீகரித்தல் போலப் புண்ணியரை வசீகரித்தல் கூறப்பட்டது. புண்ணியர் சிவபுண்ணியத்தின் பயனாகிய சிவஞானத்தைப் பெற்றவர். நெறி, சிவஞானம். வந்து-அழகிய கோலத்துடன் வந்து. இதனை, ‘‘போற்றிசைப்ப’’ என்றதன்பின்னர்க் கூட்டுக. 297. பாலுக்கு-பாலை உண்பதற்கு. ‘‘பாலகன்’’ என்றது, உபமன்னிய முனிவரை. வேண்டி-விரும்பி. வியாக்கிரபாத முனிவர் மகனாராகிய உபமன்னிய முனிவர் பிள்ளைமைப் பருவத்தில் பால் பெறாது அழுது வருந்த, அவரை வியாக்கிரபாத முனிவர் கூத்தப் பெருமான் திருமுன்பிற் கிடத்துதலும், கூத்தப்பெருமான் அவருக்குப் பாற்கடலை அழைத்து அளித்த வரலாற்றைக் கோயிற்புராணத்துட் காண்க. சிவபெருமான் திருமால் செய்த வழிபாட்டிற்கு இரங்கிச் சக்கரம் அளித்த வரலாறு வெளிப்படை. ஆலிக்கும்-வேதத்தை ஓதுகின்ற. ஆலித்தல்-ஒலித்தல்; ‘‘அஞ்செவி நிறைய ஆலின’’ (முல்லைப்பாட்டு-89.) என்றது காண்க. வாழ்கின்ற-வாழ்தற்கு முதலாய் நிற்கின்ற. ‘‘சிற்றம்பலமே’’ என்ற ஏகாரம் பிரிநிலை. பாலித்து-அருளை வழங்கி. இது, ‘பாலியாநின்று’ என நிகழ்காலம் பற்றி நின்றது. 298. ‘தாதையை வீசிய’ என இயையும். சண்டி-சண்டேசுர நாயனார். இவர், தந்தைதன் காலை வெட்டிப் பேறு பெற்ற வரலாறு பெரியபுராணத்துட் பரக்கக் காணப்படுவது. அண்டம்-வானுலகம். என்றது, அதன்கண் உள்ளாரை. |