தோன்றியவர். இவர் தம் முன்னோர்கள் வாழ்ந்த மடம் மாளிகை மடம் (பெரிய மடம்) எனப்படும். அம்மடத்தின் சார்பால் இவர் திருமாளிகைத் தேவர் எனப்பட்டார், என்பர். ‘‘போகர் திருமாளிகைத்தேவருக்கு நடராஜப் பெருமானைப் பூசை செய்யும் செயல் முறைகளையும், கருவூர்த்தேவருக்கு பராசக்தியைப் பூசைசெய்யும் விதிமுறைகளையும் உபதேசித்தார். திருமாளிகைத்தேவர் தாம் பூசித்த நிர்மாலியத்தைக் கருவூர்த்தேவருக்குக் கொடுக்க அதனை அவர் வாங்கி உண்டார். அவ்வாறே கருவூர்த்தேவர் தாம் அம்பிகையைப் பூசித்த நிர்மாலியத்தைத் திருமாளிகைத்தேவருக்குத் தர அவர் அதனை வாங்க மறுத்தார். கருவூர்ச்சித்தர் இதனை அறிந்து மனம் சலித்து போகரிடத்தில் நிகழ்ந்ததைக் கூறினார். போகர் திருமாளிகைத்தேவர் செய்ததே சரி என்று கூறி இறைவனைப் பூசிக்கின்ற பூசையே மிகச்சிறந்தது: அவர், நீர் தந்த பூசைப்பொருள்களை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தது குற்றமில்லை, என்று கருவூர்த்தேவரைத் தேற்றினார். கருவூர்ச்சித்தர் தம் குருநாதருடைய உரையைக் கேட்டுத் தெளிந்து போகரையும், திருமாளிகைத்தேவரையும் வணங்கி அவர்களோடு உடன் உறைவார் ஆயினார். ஒரு நாள் போகர் தம்முடைய பாதுகையைத் திருமாளிகைத் தேவரிடம் கொடுத்து ‘இதனைப் பூசித்துக்கொண்டு இத்திருவாவடுதுறைத் தலத்திலேயே இருந்து அன்பர்களுக்கு அருள் வழங்குக’ என ஆணைதந்து, தான் அத்தலத்தை விட்டுத் திருப்புகலூருக்குச் சென்றார், திருமாளிகைத்தேவர் குருஆணைப்படி. ‘‘திருக்கூட்டச் சிறப்பினொடும் செபந்தவந்தியானம் நிட்டை உருக்கமோ டிருந்துசெய்தற் காகுநல் லிடமா யோங்கும் பொருப்புறழ் விமானக்கோயில் அருகு தென்புறத்தின் மேவ அருத்தியி னொடுமிக் கான திருமட மொன்றுண் டாக்கி’’ ‘‘தேசிகர் பணித்த வண்ணம் செய்கை தப்பாமல் பேணி மாசிலா மணிபொற் பாதம் நாடொறும் வணங்கி மிக்க நேசமொ டாசான் செம்பொன் திருவடி நேர்வைத்தர்ச்சித் தாசையொ டடியார் கூட்டத்துடன் கலந்தமாந்தெந்நாளும்’’ ‘‘நவகோடி சித்தர்க்கெல்லா மிடங்கள் நன்கமையப் பண்ணி சிவசமயத்தை நாளும் வளர்த்து நற்செய்கையோடும் தவமலி நீற்றின் சார்பு உழைத்திடச் சமாதி யோகம் உவகையொடியற்றி மூல எழுத்தைந்து மோதி’’ |