எம்பந்த வல்வினைநோய் தீர்த்திட் டெமையாளும் சம்பந்தன் (188) களையாவுடலோடு சேரமானாரூரன், விளையா மதமாறா வெள்ளானைமேல் கொள்ள உதவினாய் (189). சிலந்தியை அரசாள்க என்று அருள்செய்தவனே (228) உலந்த மார்க்கண்டேயருக்காகக் காலனை யுயிர்செக உதைத்தவனே (228) என்றெல்லாம் அடியார்களைப் போற்றும் திறத்தைத் திருவிசைப்பாவில் காண்கிறோம். பக்தியமுதை இலக்கியச் சுவையோடு தரும் அரிய திருமுறை இது என்பதில் என்ன ஐயமுண்டு? தொட்ட தொட்ட இடமெல்லாம் இனிக்கும் தேனூற்றாகத் திகழ்கிறது ஒன்பதாம் திருமுறை. இது சிந்திக்க இனியது. வந்திக்க நல்வழி காட்டுவது. ஆகவே இதனைப் புந்திக்குள் வைத்துப் போற்றுவதில் நாம் முந்திக்கொள்வோம். வாழ்க திருமுறைகள் ! வளர்க திருமுறைத் தொண்டு !! |