மாமலர்க்கண் நங்கை தெய்வயானைக்கும்- குறவள்ளிக்கும் காந்தனெனக் கருதினாளில்லையே! அம் முருகவேளெனும் முளையிளங்களிறு என்மொய் குழற் சிறுமிக்கு அருளுங்கொல்! என ஐயவினா எழுப்புகிறாள். இவள் இடருற இன்னொரு காரணமும் உண்டு. மோகத்தால் மதியிழப்பதற்குமுன் காதலனின் தன்மையை நன்கு தெளிதல் வேண்டுமன்றோ! அன்புகொண்ட பிறகு ஆராய்ந்து என்ன பயன். ‘‘தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்’’. என்பது இவளுக்குத் தெரியாது போலும்- என்று நையும் தாயின் இதயம் இங்கே பேசுகிறது. ‘‘பரிந்த செஞ்சுடரோ பரிதியோ மின்னோ பவளத்தின் குழவியோ பசும்பொன் சொரிந்த சிந்துரமோ தூமணித் திரளோ சுந்தரத் தரசிது வென்னத் தெரிந்தவை திகர்வாழ் திருவிடைக் கழியிற் திருக்குரா நீழற்கீழ் நின்ற வரிந்த வெஞ்சிலைக்கை மைந்தனை யஞ்சொல் மையல் கொண்டு ஐயுறும் வகையே’’. -சேந்தனார். தீவண்ணனின் திருமகன் என்பதிற்கேற்ப சுடரும், பரிதியும், மின்னலும், பவளமும், செந்துரமும் உவமை காட்டப் படுகிறது. இக்கருத்து ‘தாமரை புரையுங் காமர் சேவடியும் பவளத்தன்ன மேனியும். திகழொளி குன்றி யேய்க்கும் உடுக்கையும், குன்றின் நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் வேலையுங்கொண்ட சேவலங் கொடியோனாகக் குறுந்தொகை காட்டும் ஓவியத்தை நினைவூட்டுகிறது. தொண்டர்களைப் போற்றும் தொன்மை நெறி: கடியார் கணம்புல்லர் கண்ணப்பரென்று வரும் அடியார்களை அமரருலகம் ஆளச் செய்தாய் (186) அல்லியம் பழனத் தாமூர் நாவுக்கரசைச் செல்ல நெறி வகுத்த சேவகன் (187) |