பக்கம் எண் :

184கல்லாடம்[செய்யுள்21]



65
  நீங்கினர் போக்கு மீங்குழி வருதுங்
கண்டது கூறுதி யாயி
    னெண்டகப் போற்றிநின் கால்வணங் குதுமே.

(உரை)
கைகோள்; களவு. தலைவி கூற்று

துறை:- தன்னுட் கையா றெய்திடு கிளவி

     (இ-ம்.) இதற்கு “மறைந்தவற் காண்டல்” (தொல். கள. 21) எனவரும் நூற்பாவின்கண் ‘அருமை செய் தயர்ப்பினும்’ எனவரும் விதிகொள்க.

1-2: நீர்.....................பாசடையும்

     (இ-ள்) நீர் நிலை நின்று கால் கறுத்து எழுந்து-கடலின்கண் நீரைப் பருகி நின்று தம்மிடமெல்லாம் கறுத்து விசும்பின்கண் எழுந்து; திக்கு நிலை படர்ந்த முகில் பாசடையும்-திசை நிலைகளிலே பரவிச் சென்ற முகில்களாகிய பசிய இலைகளையு என்க.

     (வி-ம்.) நீர் நிலை-கடல். நிலைநீர் என நிற்கவேண்டிய மொழிகள் முன்பின்னாக மாறி நீர் நிலை என்று நின்றன. நிலைநீர்: அன்மொழித் தொகை. னிலைத்த நீரையுடைய கடல் என விரியும். கடலிடத்து நின்று நீரைப் பருகிக் கறுத்து எழுந்து படர்ந்த முகில் எனச் சில சொற் பெய்துரைக்க. கால்-இடம். திக்கு நிலை-திக்காகிய நிலைக்களங்கள் என்க. முகிலகிய பாசடை என்க.

3-5: இடை.....................வனப்பும்

     (இ-ள்) இடை இடை உகளும்-இடையிலே இடையிலே இயங்குகின்ற; மீனும் மீனும்-நாள்மீனாகிய மீன்களையும்; செம்முகில் பழநுரை வெள்முகில் புது நுரை எங்கு சிதறி-சிவந்த முகிலாகிய பழைய நுரைகளையும் வெள்ளை முகிலாகிய புதிய நுரைகலையும் தன்னிடமெங்கும் சிதறி; பொங்கி எழு வனப்பும்-மிகுந்து எழாநின்ற அழகினையும் என்க.

     (வி-ம்.) வினை முதலல்லாத கருவி முதலாயின அவ்வினை முதல் வினைக்குச் செய்விப்பனவாம் ஆதலின் சிதறி எனச் செய்விப்பதாகக் கூறினார்.

“வேய்தந்த வெண்முத்தஞ் சிந்துபைங்
 கார்வரை மீன்பரப்பிச்
 சேய்தந்தவானகமானும் சிலம்ப” (திருக்கோவை. 130. உரை)

என்றாற் போல பழையநுரை சிவந்திருத்தலால் அதற்குவமையாகச் செம்மேகம் என்றாள். வனப்பு-அழகு.