பக்கம் எண் :

மூலமும் உரையும்319



தாராநின்ற மதுரையின்கண்; நிறை பெருமான்-எழுந்தருளியுள்ள பெருமானும் ஆகிய சோமசுந்தரக் கடவுளினுடைய; திருவடி சுமந்த அருளினர் போல-திருவடிகளை நெஞ்சத்தின்கண் தாங்கிய அருளாளர்போல என்க.

     (வி-ம்.) கிடை-பள்ளி. தாபதர்-துறவோர். கிடக்குமிடமாதலின் பள்ளி கிடை எனப்பட்டது. தொடை-ஒருவகைச் செய்யுளுறுப்பு. பொங்கர்-சோலை. குளிரல்-முழக்கம். வல்லி-விலங்கு. பரிதல்-அறுத்தல். முறித்தலுமாம். பகடு-யானை. யாணர்-அழகு. கொடிஞ்சி-ஒரு தேருறுப்பு. இசைப்பு-முழக்கம். அழுங்குதல்-ஆரவாரித்தல். ஒலிகள் பல ஓரிடத்தெழின் பேரொலியாதலியல்பாகலின் நின்ற நிலை பெருகி என்றான். மாதிரம்-திசை.

5: நிங்...........................யானும்

     (இ-ள்) நின்பெறு தவத்தினை-பெறற்கரும் பேறாகிய நின்னைப் பெறுதற்குக் காரணமான தவத்தினை; முற்றிய யானும்-பண்டும் பண்டும் பலப்பல பிறப்புக்களிலே செய்து முடித்த யானும் என்க.

     (வி-ம்.) வேண்டிய வேண்டியாங்கு எய்தற்குச் செய்தவமே காரணமாகலின் பெறற்கரும் பேறாகிய நின்னை இங்ஙனம் பெற்றதற்கு முற்பிறப்புக்களிலே பெருந்தவம் செய்து முடித்தேனாதல் ஒருதலை என்பான் நிற்பேறு தவத்தினை முற்றிய யானும் என்றான்.

18-22: கருந்தேன்....................................கண்ணாகுவனே

     (இ-ள்) கருந்தேன் உடைத்து செம்மணி சிதறி-பெரிய தேன் கூண்டினைக் கிழித்துச் சிவந்த மாணிக்கங்களை யாண்டும் சிதறி; பாகல்கோட்டில் படர்கறி வணக்கி-பலாவினது கிளைகளிலே படர்ந்த மிளகுக் கொடிகளினை வளைத்து; கல் என்று இழிந்து-கல்லென்னும் ஓசையுண்டாக்க வீழ்ந்து; கொல்லையில் பரக்கும் கறங்கு இசை அருவி-புனங்களிலே பரவுகின்ற மிகுந்த ஒலியுள்ள அருவி நிரினையுடைய; அம்சாரல் புறம்பு தோன்றி-அழகிய இம்மலைச் சாரலின் பக்கத்தே சென்று; நின்கண் ஆகுவன்-விரைவில் மீண்டு உன்னிடத்தே வருவேன்காண் ஆதலால் வருந்தாதேகுக! என்க.

     (வி-ம்.) கருந்தேன் என்புழி அன்மொழித் தொகையாய்த் தேன் கூண்டை உணர்த்திற்று. பாகல்-பலா. கறி-மிளகு. கல்லென்று; ஒலிக்குறிப்பு. கறங்குதல்-ஒலித்தல். புறம்பு-பக்கம். ஆதலால் வருந்தாதேகுக என்பது குறிப்பெச்சம்.

     இனி இதனைச் செம்மகளே! நீ சென்று ஆடுக. நிற்பெறு தவத்தினைச் செய்து முற்றிய யானும் சாரலின் புறம்பு தோன்றி விரைவில் நின்னிடத்தே வருகுவன் என வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.