பக்கம் எண் :

384கல்லாடம்[செய்யுள்49]



(உரை)
கைகோள்: களவு. தோழி கூற்று

துறை: விரவிக்கூறல்.

     (இ - ம்.) இதற்கு, "நாற்றமும் தோற்றமும்" (தொல். களவி. 23) எனவரும் நூற்பாவின்கண் 'மறைந்தவள் அருகத் தன்னொடு மவளொடு முதல்மூன்று அளைஇப் பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கினும்' என்பதன்கண் பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கினும் எனவரும் விதிகொள்க.

1 - 4: வியர் . . . . . . . . . . அணங்கு

     (இ-ள்) வியர் அமுது அரும்பி முயல்கண் கறுத்து - வியர்வாகி அமுதம் துளிக்கப் பெற்றுப் போர் முயலுதலையுடைய கண் கறுத்து; தண்ணம் நின்று உதவலின் -குளிர்ச்சியைத் தந்து நிற்றலால்; நிறைமதி ஆகி - முழுவெண்டிங்களேயாகி; பொன்னம் பொகுட்டுத் தாமரை குவித்து - பொன்னிறமான அழகிய பொகுட்டினையுடைய தாமரை மலரைக் குவியும்படி செய்து; நிறை அளி புரக்கும் - நிரம்பிய தண்ணளியைத் தன்னிடத்தே வைத்துக் காவா நின்ற; புதுமுகத்து அணங்கு - காணுந்தோறும் புதுமை பயக்கும் முகத்தினையுடைய திருமகளை யொத்த பெருமாட்டியே கேள் என்க.

     (வி-ம்.) வியர் - வியர்வை. அரும்புதல் - முகிழ்த்தல். முயற்கண் கறுத்து என்புழித் திங்களுக்கு முயலையுடைய இடங்கறுத்து என்றும் முகத்திற்குப் போர் முயலுங்கண்கள் கறுத்து என்றும் கொள்க. தண்ணம், அம் : சாரியை. பொன்னம் பொகுட்டு என்புழி அம் அழகு. பொகுட்டு - கொட்டை. தாமரை மலர் இவள் முகத்தை ஒவ்வேம் என்று நாணிக் கூம்பும் என்பாள் தாமரை குவித்து என்றாள். குறை நயப்பிக்கின்றாளாகலின் நீ அளி புரக்கும் முகத்து அணங்கு என முகமன் மொழிந்தாள். புதுமுகம் - காணுந்தோறும் புதுமை தோன்றும் முகம். அணங்கு - தெய்வப்பென். ஈண்டுத் திருமகள். அணங்கு:அண்மை விளி.

7 - 12: ஒருதனி . . . . . . . . . . ஓட்டல்

     (இ-ள்) ஒருதனி அடியாற்கு உதவுதல் வேண்டி - தனிமையான ஓர் அடியவனுக்கு உதவி செய்யும்படி திருவுளம் கொண்டு; மண்ணவர் காண - நிலவுகலத்திலுள்ளார் அறியும் படி; வட்டணை வாள் எடுத்து - கேடகத்தையும் வாளையும் கைகளிலே பற்றி; ஆதி சாரணை அடர்நிலை பார்வை வாளுடன் நெருக்கல் மார்பொடு மனைதல்- முதலில் சார்ந்து நிற்றலும் நெருங்கு நிலையிலே நோக்கம் வைத்தலும் வாளொடு நெருங்குதலும் வாளை மார்விலேற்றி எதிர்த்தலும்; பற்றி நின்று