பக்கம் எண் :

மூலமும் உரையும்495



24-26: குறி...................................மதியாகுவனே

     (இ-ள்) குறி உரு கடந்த - அடையாளமும் உருவமும் இல்லாத ; இருபதம் உள்வைத்தவர்போல் - இரண்டு திருவடிகளையும் நெஞ்சத்தின்கண் வைத்த அடியார்போல ; மருவுதல் ஒருவும் மதி ஆகுவன் - இக்கூற்றுவனைச் சேர்தலினின்றும் நீங்காநின்ற நல்லறிவுடையேன் ஆகுவேன்மன் என்க.

     (வி-ம்.) குறி - பெயர், உரு - வடிவம், உள் - நெஞ்சம், கூடற்பெருமானுடைய அடியை நெஞ்சில் வைத்தோர் அவரொடு இரண்டற மருவுதல்போல மருவுதலை நீங்கும் அறிவுடையேன் ஆவேன் என்பது கருத்து. எனவே என் உயிர் கவர்தற்பொருட்டுப் பெண்வேடங் கொண்டு கூற்றுவன் வந்துள்ளான், யான் இவ்வுண்மை அறியாமல் மயங்கிப் பெண்ணென்றே கருதிக்கூடி அறிவுகெட்டேன் என்று இரங்கினானாம். இது கற்புக்காலத்தில் தன் பரத்தமை காரணமாக ஊடிய தலைவியை ஊடல்தீர்க்கும் தலைவன் களவுக்காலத்து நிகழ்ச்சி ஒன்றனை நினைந்து கூறியவாறு என்க. இக்கருத்தினை

“பண்டறியேன் கூற்றென் பதனை யினியறிந்தேன்
 பெண்டகையாற் பேரமர்க் கட்டு ”
(குறள். 1083)

எனவும்,

“வலைவாழ்நர் சேரி வலையுணங்கு முன்றின் மலர்கை யேந்தி
 விலைமீனுணங்கற்பொருட்டாக வேண்டுருவங்கொண்டுவேறோர்
 கொலைவே னெடுங்கட் கொடுங்கூற்றம் வாழ்வ
 தலைநீர்த்தண் கான லறியே னறிவேனே லடையேன் மன்னோ ”
                       (சிலப்.க. புகார்க்காண்டம், கானல்வரி, 2)

எனவும் வரும் இலக்கியங்களையும் நோக்குக.

     இனி இனை, கழிக்கரைச் சேரியோர் பாங்கர், உணங்கல் காவலாகக், கொடுநிலைக் கூற்ற மகளெனத் தரித்தநிலை யறிகுவனேல், கூடற்கிறையோனது இருபத முன்வைத்தவர்போல் மருவுதலொருவு மதியாகுவனென வினைமுடிவு செய்க. மெ்ய்ப்பாடும் பயனும் அவை.