பக்கம் எண் :

மூலமும் உரையும்535



1-3: மலரவன்..........................மடந்தை

     (இ-ள்) மலரவன் பனிக்கும் கவினும் - நான்முகன் இவ்வடிவு நம்மால் படைத்தற்கு அரிது என்று அஞ்சுதற்குக் காரணமான பேரழகும் ; குலமீன் அருகிய கற்பும் - வடமீனாகிய அருந்ததியினுடைய கற்பும் குறைந்ததென்று கூறுதற்குக் காரணமான சிறந்த கற்பும்; கருதி உள் நடுங்கி - நினைத்துப் பார்த்து இப்பேறு நம்மாற் பெறுதற்கியலாதென மனம் நடுங்கி ; திருமகள் மலர்புகும் ஒருதனி மடந்தை - திருமகளானவள் தாமரை மலரில் ஒளிதற்குக் காரணமான ஒப்பற்ற மங்கையே என்க.

     (வி-ம்.) மலரவன் - நான்முகன், பனித்தல் - நடுங்குதல், குலமீன் கற்பு என்க. கவினும் கற்புங் கண்டு கருதிப்பார்த்துத் திருமகள் நடுங்கி மலர்புகுதற்குக் காரணமான மடந்தை என்க. மடந்தை: விளி.

3-6: இன்று...................................காதலர்

     (இ-ள்) இன்று - இற்றைநாள் ; இருகடல் ஓர்உழி மருவியது என்ன- இரண்டுகடல்கள் ஓரிடத்திலே சேர்ந்தாற் போலச்சேர்ந்த ; செருபடை வேந்தர்- போர்செய்தற்குரி படைகளையுடைய வேந்தருடைய ; முனைமேல் படர்ந்த நங்காதலர் - போரைக் கருதிச்சென்ற நம் தலைவருடைய என்க.

     (வி-ம்.) ஓருழி - ஓரிடத்தில், செரு - போர், முனை - போர் முனை, படர்தல் - செல்லுதல்.

6-9: முனை.........................கொண்டு

     (இ-ள்) முனைப்படை கனன்று - கூர்மை பொருந்திய படைக்கலமானது வெகுண்டு ; உடற்றும் - போர்செய்கின்ற ; எரியால் - நெருப்பால் ; முடம்படு நாஞ்சில் பொன்முகம் கிழித்த - வளைவுள்ள கலப்பையிற் பொருந்திய இரும்பாற் செய்த கொழுவினது நுனியாற் கிழிக்கப்பட்ட ; நெடுஞ்சால் போகி - நெடிய படைச்சாலின் வழியாகச் சென்று ; கடுங்கயல் துரக்கும் மங்கையர் - வேகமுள்ள கயல்மீன்கள் தம்மை ஓட்டுகின்ற மகளிருடைய ; குழைபெறு வள்ளையில்- பொற்குழையணிந்த செவியினையொத்த வள்ளைத்தண்டின்கண் ; தடைகொண்டு- தடைபட்டு என்க.

     (வி-ம்.) சால் - படைச்சால், அஃதாவது கலப்பை உழுத சுகடு - குழை: ஆகுபெயர் - குழையணிந்த செவி என்க. வள்ளை . ஒருவகை நீர்க்கொடி.

10-14: அவர்................................பெற்று.

     (இ-ள்) அவர் கருங்கண் என - அம்மகளிருடைய கண்ணைப்போல; தழைகுவளை, பூத்த - தழைத்த குவளை