|
தீயை வளர்த்தனர் என்க.
அங்ஙனமே அமரர் அவியுண்ணற் பொருட்டன்றி அத்தீயினை அணுகினர் என்க.
9-14:
முன்....................பெரும்பதியினும்
(இ-ள்)
இடைக்காடன் முன் எழபின் நடந்து-இடைக்காடன் முன்னொரு காலத்தே சென்றபோது அவன்
பின்னே சென்று; நோன்பு உறு விரதியர் நுகர உள் இருந்தென-தவம் செய்கின்ற துறவோர்
நுகர்ந்து இன்புறும்படி அவர்கள் உள்ளத்தில் அமுதமாக இருந்தாற்போல; நெஞ்சகம் நிறைந்து-அடியார்
நெஞ்சினிடத்தே நிறைந்திருந்து; நினைவினுள் மறைந்து-அவர்கள் நினையும் நினைவினுக்கும்
நினைவாய் மறைந்திருந்து; புரை அரும் அன்புனர் விழிபெற ஒப்புக்காண்டலரிய-அன்பினையுடைய
அவ்வடியார் கண்கூடாகக் காணும்படி; தோற்றி-நல்லாசிரியன் உருவம் கொண்டு அவர்முன்
தோன்றி; வானவர் நெடுமுடி மணித்தொகை திரட்டி-தேவர்களுடைய நீண்ட முடிகளிலுள்ள மாணிக்கத்திரள்களைச்
சேர்த்து; பதுக்கைசெய் அம்பலம் திருப்பெரும் பதியினும்-மேடாக்குகின்ற பொன்னம்பலமாகிய
பெரிய திருப்பதியினிடத்தும் என்க.
(வி-ம்.)
இடைக்காடன் முன்எழ என்புழி முன் முற்காலத்தில் என்பதுபட நின்றது. நோன்புறு விரதியர்-தவத்தோர்.
நுகர்தல்-உண்ணுதல். நினைவினுள் மறைதலாவது நினைவினுக்கும் நினைவாய் மறைந்து நிற்றல்.
புரை-ஒப்பு. விழிபெறுதல்-கண்ணாற் காணப்பெறுதல். தேவர்கள் திரண்டு வந்து வணங்குங்கால்
அவர் முடிகள் ஒன்றனோடொன்று தாக்குண்டு உதிர்ந்த மணிகள் பொன்னம்பலத்தை மேடாக்குதலால்
வானவர் முடி மணித்தொகை திரட்டிப் பதுக்கை செய் அம்பலம் என்றார். பதுக்கை-மேடை;
கற்குவியல்.
15-19:
பிறவா..................காண
(இ-ள்)
பிறவாப் பேரூர் பழநகர் இடத்தும்-பிறவாமையைத் தருகின்ற பெரிய ஊராகிய பழைய காசி
நகரிடத்தும்; மகிழ் நடம் பேய் பெறும் வடவனக்காட்டினும்- இன்பக்கூத்தைக் காரைக்காலம்மையார்
பெற்ற திருவாலங்காட்டினிடத்தும்; அருமறை முடியினும்-உணர்தற்கரிய மறைநூலின் இறுதியிலும்;
அடியவர் உள்ளத்தினும்-மெய்யடியார் நெஞ்சகத்தினும்; குனித்து அருள் நாயகன்-திருக்கூத்தாடியருளிய
முதல்வனும்; குலம்மறை பயந்தோன்-சிறந்த வேதத்தை அருளிச்செய்தவனும் ஆகிய சிவபெருமான்;
தமிழ்க் கூடல் பெருந்தவர் காண-செந்தமிழ் வளர்த்த மதுரை நகரத்தின்கண் பெரிய தவத்தினையுடைய
பதஞ்சலி முதலியோர் காணும்படி என்க.
(வி-ம்.)
காசியில் இறந்தோர் மீண்டும் பிறவார் ஆகலின் காசியைப் பிறவாப் பேரூர் என்று
கூறினார். மகிழ்-இன்பம். பேய்-
|