பக்கம் எண் :

மூலமும் உரையும்579



     (வி-ம்.) நெருநல்-நேற்று. எற்கு-எனக்கு. கரத்தல்-ஒளித்தல். என்னே என்றது இருந்தவாறென்னையோ? என்று வியந்தபடியாம். ஏலா-பொருந்தாத. அஃதாவது தகாத என்றவாறு.

“சான்றவர் சான்றாண்மை குன்றி னிருநிலந்தான்
 தாங்காது மன்னோ பொறை”        (குறள். 990)

என்பது பற்றி இவ்வேலாக் கடுங்கண் கொடுத்துண்டவன் பின் கரந்தமைகடுக்கும் என்றான். கடுங்கண்-கொடுமை. கடுக்கும்-ஒக்கும்.

49 - 54: என் நிழல்......................கடனே

     (இ-ள்) என் நிழல் இரும்புனத்து இருந்து ஒளிர் அருந்தேன்-என் நிழல்போல இந்தப் பெரிய தினைப்புனத்தின்கண் என்னுடன் இருந்து திகழ்ந்த பெறுதற்கரிய தேனை ஒத்த என் காதலி; இலதால்-இப்பொழுது இங்கு இலள் ஆதலால்; நின் புலம் அல்ல என்று-ஏடா! இதுதான் நின்னுடைய தினைப்புனம் அல்ல என்று; என்புலம் வெளிப்பட-எனதறிவிற்கு விளங்கும்படி; நீரும் அறைதல் வேண்டும்-நீங்களும் எனக்குச் சொல்லுதல் வேண்டும், இன்றேல்; அப்புனம் நீரேன்-அந்தத் தினைப்புனமே இஃதாக; நீங்களும் அதன்கண் இருப்பீரேயாயின்; முன்னம் கண்டவன் அன்று என்று உன்னா-என்னை முன்னம் இங்குவர யாம் கண்டவன் இவனல்லன் என்று நினையாமல்; உதவுதல் உயர்ந்தார் கடன்; அவள் சென்ற வழியைச் சொல்லுதல் உயர்ந்தோராகிய நுங்கள் கடமையே யாகுங்காண் என்க.

     (வி-ம்.) நீயிரும் வஞ்சிப்பீராயின் இது நின்புலம் அல்ல என்று அறைதல்வேண்டும் என்பான் நீரும் உம்மை கொடுத்தோதினான். அப்புனம் நீரேல் என்புழி இப்புனம் அப்புனமாக நீர் அப்புனத்திலுள்ள நீரேயாயின் எனப் பொருள் விரித்தோதுக. யான் நும்மை ஐயுறுமாறு போலே என்னை நீயிரும் ஐயுறுதல் கூடுமன்றோ? அங்ஙனம் ஐயுறாதொழிக: என்பான் முன்னம் கண்டவன் அன்று என்று உன்னாது உதவுதல் கடன் என்றான். உதவுதல்-தலைவி சென்ற வழி கூறி உதவி செய்தல்.

     இனி இதனை, துணர்மலர் விரிந்த கொடியே! காம்பே! மயிற்குலமே! எறிபுன மணியே! வளைவாய்க் கிளியே! சுரும்பே! பொழிலே! இதணே! நெருநற் கண்ட வெற்கு உதவியவின்பம் இற்றையிற் கரந்த விருண்மனமென், நிற்கவைத்த வேலாக்கடுங்கண் கொடுத்துண்டவர் பின் கரந்தமை கடுக்கும், இவை கிடக்க, இரும்புனத்திருந் தொளிரருந்தேனிலதால், நின்புல மல்லவென்று என்புலம் வெளிப்பட நீரும் அறைதல் வேண்டும். அப்புனம் நீரேல், முன்னங் கண்டவன் அன்றென்றுன்னாது உதவுதல் உயர்ந்தோராகிய நுங் கடனென வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.