பக்கம் எண் :

624கல்லாடம்[செய்யுள்88]



35
  வானக வாவி யூடுற மலர
வொருதா ளெழுபுவி யொருவத் திண்டோள்
பத்துத் திசையு ளெட்டவை யுடைப்ப
    வொருநடங் குலவிய திருவடி யுரவோன்
கூடலம் பதியகம் பரவி
நீடநின் றெண்ணா ருளமென நீயே.

(உரை)
கைகோள்: கற்பு. தோழி கூற்று.

துறை: வருத்தந்தணித்தல்.

     (இ-ம்.) இதனை “பெரற்கரும் பெரும் பொருள்” (தொல். கற்பி. 9) எனவரும் நூற்பாவின்கண் ‘பிற’ என்பதன்கண் அமைத்துக் கொள்க.

1 - 5: வேலி..................................நெஞ்சம்

     (இ-ள்) வேலி அம் குறுஞ்சூல் விளைகாய் பஞ்சு இனம்-வேலிப்பருத்தியினது குறிய பிஞ்சு முதிர்ந்த காய் வெடித்துழி அதனுள் அடங்கிய பஞ்சுக்கூட்டங்கள்; பெரு வெள்ளிடையில் சிறுகால் பட்டென-பெரிய வெளியிடத்தே மெல்லிய தென்றற் காற்றில் அகப்பட்டாற் போல; நிறை நாண் வேலி நீங்கி-என்னுடைய நிறையும் நாணமுமாகிய பாதுகாவல் பறந்தொழியா நிற்ப; தமியே ஒருவழி நில்லாது அலமரல் கொள்ளும் என் அருந்துணை நெஞ்சம்-தனித்து ஒரு நிலையில் நில்லாமல் சுழலா நின்ற எனது பெரிய துணையாகிய நெஞ்சமானது என்க.

     (வி-ம்.) வேலி-வேலிப்பருத்தி என்னும் ஒருவகைக் கொடி. இதன் காய் முதிர்ந்து வெடிக்குங்காலதனகத்துள் பஞ்சுகள் சிறு சிறு விதைகளுடன் காற்றிற் பறந்து செல்லும் இயல்புடையது. அதனை ஈண்டுத் தன்னை விட்டு ஒழிந்து போன நிறைக்கும் நாணுக்கும் உவமையாக்கினாள் என்க. சிறுகால் என்றது தென்றற்காற்றினை. சிறுமை-ஈண்டு மென்மை முறித்து நின்றது. இதனை வடநூலார் மந்த மாருதம் என்ப. நிறை-மனம் புலன்களிற் செல்லாமல் தடுக்கும் ஆற்றல். நாண்-பெண்மைக் குணங்களில் ஒன்று. நிறை நாண் என்பவற்றில் ஈற்றில் எண்ணும்மைகள் தொக்கன. அலமரல்-சுழலுதல். நீக்கி: எச்சத்திரிபு.

5 - 10: நிற்குறும்............................................சிறுபனும்

     (இ-ள்) நிற்கு உறும் பயன்-உன்பால் பொருந்தத்தக்க பயனை; நீ கேண்மதி-நீ கேட்பாயாக; மண் உளர் வணங்கும் தன்னுடைத்தகைமையும்-மண்ணுலகத்தில் வாழும் மாந்