பக்கம் எண் :

சீறாப்புராணம்

104


முதற்பாகம்
 

அரம்பையர்களையும், சுவர்க்கத்தின் கண்ணுள்ள பட்சிசாதிக ளெல்லாவற்றையும், செழுமை தங்கிய சோலையையுடைய பெரிய பூமண்டலத்தின் கண்ணிறங்கி வரிபடர்ந்த வண்டினங்களைச் சிதறவீசிக் கரிய கூந்தலைமுடித்த இளங்கொடிபோலும் ஆமினா அவர்களினது மனையின் கண் அணியணியாய் நெருங்கி அவர்களது சொல்லை மறுக்காமல் ஏவல்கேட்டு நில்லுங்களென்று ஆக்கியாபித்தான்.

 

     236. கருவினிற் றோன்றா தொளிவினி லுருவாய்க்

             கண்ணிமைத் துண்டுறங் காத

         பெருவடி வழகாய்க் குழுவுடன் றிரண்டு

             பெரியவ னுரைமறா தெழுந்து

         விரிகதிர்க் ககனம் புடவிமட் டொழுங்காய்

             விண்ணவ ரெண்ணிறந் தனையோ

         ரருவரை யனையா ருருவமுஞ் சிறிதா

             யாமினா திருமனை சூழ்ந்தார்.

71

     (இ-ள்) கருப்பத்தின்கண் உற்பத்தியாகாமல் பிரகாசத்தினாற் காண்டற்கரிய சுரூபமாகிக் கண்களை மூடித் திறக்காதவும், உணாமுதலியன உண்ணாதவும், நித்திரை செய்யாதவுமான இயற்கையினையுடைய வானவர்கள் கணக்கற்றாற் போன்றவர்கள் பெரிய வடிவங்கள் அழகினவாகிக் கூட்டத்தோடு திரளாய்ப் பெரியோனாகிய ஜல்லஷானகுவத்த ஆலாவினது ஏவலாகிய சொல்லை மறுக்காம லெழுந்து விரியாநிற்கும் பிரகாசத்தையுடைய வானந்தொடங்கிப் பூமண்டலம் வரையும் அணியணியாய் அரியமலைகளையொத்தவர்களாகிய அவ்வானவர்கள் தமதுருவங்கள் சிறிதாகி ஆமினா அவர்களினது தெய்வீகத்துவம் பொருந்திய வீட்டினைச் சூழவிறங்கினார்கள். 

 

     237. தேன்பெருக் கொழுகி வழிதருங் கனிகள்

            சிதறிடுஞ் சோலைவாய்த் தெளிந்த

        வானதி மூழ்கித் துகிலெடுத் துடுத்து

            வளைபணித் தொகையெலா மணிந்து

        கான்மலர் முடித்துக் கடுவரி வடிவேற்

            கண்களி லஞ்சனங் குலவச்

        சூன்முதி ராமி னாமனை யிடத்திற்

            சூழ்ந்தனர் விண்ணவர் மகளிர்.

72

     (இ-ள்) தேவமகளிரான வரம்பையர்கள் பலர் தேனினது பெருக்கானது வார்ந்து வழிதலைத் தராநின்ற பலவகைக் கனிகளைச் சிதறிடும் சோலையின்கணுள்ள தெளிவுற்ற பரிசுத்தமான சுவர்க்கத்து ஆற்றின்கண் ஸ்நானஞ்செய்து