இரண்டாம் பாகம்
விருந்திட்டீமான் கொள்வித்த படலம்
எழுசீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம்
2852.
மதிமுகம் மதுதா யாமினாக் குரிய
மாதுலர் பனீநச்சா றுகளின்
முதியரை யழைத்திந் நிலம்விலைப் படுத்தித்
தருகென மொழிதலு மெவர்க்கும்
புதியவ னெமக்கு விலைகொடுத் தருள்வ
னும்மிடம் பொருள்கொளோ மென்ன
விதமொடு முரைப்ப வவர்தமக் கெதிரி
னபூபக்க ரினிதெடுத் துரைப்பார்.
1
(இ-ள்) அறிவினை யுடைய
நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா அஹ்மது முஜ்தபா றசூல்
சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் தங்களின் மாதா ஆமினா அவர்களுக்குச் சொந்தமான மாமன்மார்களாகிய
பனீ நஜ்ஜா றென்பவர்களில் மூத்தோர்களைக் கூப்பிட்டு நீங்கள் எனக்கு இந்தப் பூமியை விலைப்
படுத்தித் தாருங்க ளென்று கேட்ட வளவில், அவர்கள் யாவர்கட்கும் புதியவனான அல்லாகு சுபுகானகு
வத்த ஆலாவானவன் எங்களுக்கு விலை தந்து கிருபை செய்வான். யாங்கள் உங்களிடத்தில் பொன்
வாங்க மாட்டோ மென்று இனிமையுடன் கூற, அவர்களுக்கு எதிராக இதத்தோடும் அபூபக்கர் சித்தீகு
றலியல்லாகு அன்கு அவர்கள் எடுத்துச் சொல்லுவார்கள்.
2853.
மற்புய
வரிசை முகம்மது நயினார்
வாழுமா ளிகைநிலம் விலையா
நிற்சயித் திடலே கருமமென் றுரைப்ப
யாவரும் விலைநிசப் படுத்தி
விற்பிறழ் கனகக் காசுபத் தென்னப்
பொருந்தலும் விறலபூ பக்க
ரற்புட னெடுத்தங் கவர்கரத் தளித்தா
ரவர்களு நிலமளித் தனரால்.
2
(இ-ள்) வலிமையைக்
கொண்ட தோள்களை யுடைய சங்கை பொருந்திய ஆண்டவ ரான நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது
முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் வாசஞ் செய்யும் மாளிகையினது பூமியை விலையாகத்
தீர்மானிப்பதே காரியமென்று கூற, அங்கிருந்த அனைவரும் விலையை யுறுதிப் படுத்தி ஒளி வானது பிரகாசியா
நிற்கும் பொற்
|