இரண்டாம் பாகம்
4258.
குறிய வானெடும் பதப்பெருங் கூன்றொரு நடத்தி
நறிய பூந்தொடை யிணைப்புய சாபிர்முன் னணுக
நிறைப தாகினி யுடன்வர லின்றிநீர் நெறியிற்
றறுகி நின்றதென் னுரையென வெதிர்மொழி சாற்றும்.
81
(இ-ள்) அவ்வாறு நிற்க,
சுருக்கமான வாலையும், நீண்ட கால்களையும் பெரிய கூனையுமுடைய அவ்வொட்டகத்தை நடத்தி வாசனையைக்
கொண்ட புஷ்பங்களினாற் செய்யப்பட்ட மாலையைத் தரித்த இருதோள்களையுடைய அந்தச் சாபிறு றலியல்லாகு
அன்கு அவர்கள் முன்னால் வந்து சேரவும், அந்நாயக மவர்கள் நீவிர் நிறைந்த சேனைகளோடும் வராமற்
பாதையின்கண் தடைபட்டு நின்ற காரணம் யாது? அதைச் சொல்லுமென்று கேட்க, அவர்கள் பதில்
வார்த்தை சொல்லுவார்கள்.
4259.
தாங்கி லாதரு நோயினி லிடைந்துமெய் தளர்ந்து
நீங்கு றாதடர் வங்கொடு வரடுமே நிறைந்து
தேங்கி னாடொறு மெலிந்துவன் மூப்பினிற் றேய்ந்த
தூங்க லொட்டக நடந்தில விரைந்திலன் றூயோய்.
82
(இ-ள்) பரிசுத்தத்தைக்
கொண்ட நபிகட் பெருமானே! சகித்தற்கியலாத அரிய பிணியினால் வருந்திச் சரீரமானது மெலியப்
பெற்று மாறாமற் செறிந்த வங்குடன் வரடும் நிறைந்து அச்சத்தாற் பிரதி தினமும் வாடி வலிய மூப்பினால்
தேய்ந்த சோம்பலைக் கொண்ட எனது ஒட்டகமானது நடந்திலது. அதனால் யான் விரைவாக வந்திலன்.
4260.
என்ற வாசக மிருசெவி கேட்டய மிழிந்து
வென்றி சேர்புகழ் சாபிர்சோ கத்துமுன் மேவி
நின்று நாசியின் வடத்தினை யிழுத்தினி துடனீர்
கன்றி லாதுசென் றேறுமென் றுரைத்தனர் கபீபே.
83
(இ-ள்) என்று
சொல்லிய சமாச்சாரத்தை ஹபீபென்னுங் காரணப்பெயரை யுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிகாத்திமுல்
அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் இருகாதுகளினாலுங் கேள்வி யுற்றுத்
தாங்களேறியிருந்த வாகனத்தை விட்டுமிறங்கி வெற்றியைப் பொருந்திய கீர்த்தியைக் கொண்ட
சாபிர்றலியல்லாகு அன்கு அவர்களது ஒட்டகத்தின் முன்னர்ச் சென்று நின்றுகொண்டு அவ்வொட்டகத்தின்
மூக்காஞ் சரட்டைக் கையினாற் பற்றியிழுந்து நீவிர் வியசனமின்றி மகிழ்ச்சியோடும் போய்
அவ்வொட்டகத்தின் மீதேறு மென்று சொன்னார்கள்.
|