இரண்டாம் பாகம்
4277.
வரன்மு றைத்திற நடவிய மறையுரைக் கலிமா
வுரைசெ யத்தகா வானவ ராயினு மொழியா
நிரைய முற்றுழன் றழுந்தவ ரெனிலவை நினையா
வொருவி விட்டநா முய்வதெத் திறமவை யுரையீர்.
100
(இ-ள்) ஆதலால் வரன்
முறையினது திறத்தை நடாத்திய புறுக்கானுல் கரீமென்னும் வேதவசனமாகிய கலிமாவைச் சொல்லப்
பொருந்தாத தேவர்களானாலும் நீங்காத நரகலோகத்தை யடைந்து சுழன்று வருந்துவார்களென்றால் அதைச்
சிந்தியாமல் நீங்கி விட்ட நாம் கடைத்தேறுவது எவ்வாறு? அவற்றைச் சொல்லுங்கள்.
4278.
சிந்தை கூர்ந்தவ ரருள்செயிற் சேணொடிவ் வுலகு
முந்து வாழ்சரா சரமுமோர் குறைவின்றி யுவக்கு
நொந்து நோக்கிடி னவையெலா மொருங்குட னூறி
வெந்து தாழ்ந்தொரு நொடியினிற் றுகளதாய் வீழும்.
101
(இ-ள்) மேலும் அந்த
முகம்மதென்பவர் மனங் களித்துக் கிருபை செய்தால் வானலோகத்தோடு இந்தப் பூலோகமும், இவற்றிலோங்கிய
வாழுகின்ற நடையுள்ளது மில்லதும் ஒரு குற்றமு மில்லாமல் மகிழ்ச்சியடையும். அவர் வருந்திப்
பார்த்தால் அவைக ளியாவும் ஒரு நொடிப் பொழுதில் ஒன்றாக அழிந்து தீய்ந்து தாழ்ந்து தூகிகளாக
விழுந்து விடும்.
4279.
குறைவில் வாய்மையும் வணக்கமுங் கோதறு குணமு
நிறையு மானமு மிரக்கமுங் கொடையுநன் னெறியும்
பொறையும் வீரமும் போதமு நீதமும் புகழு
மறையு மோருரு வாய்த்திரண் டெழுமுகம் மதுவே.
102
(இ-ள்) அன்றியும்,
அவர் குற்றமற்ற சத்தியமும் வணக்கமுங் களங்கமற்ற குணமும் மாட்சிமையும் அபிமானமும் காருண்ணியமும்
ஈகையும் நல்ல சன்மார்க்கமும் பொறுமையும் வீரமும் ஞானமும் நியாயமுங் கீர்த்தியும் வேதங்களும்
ஒப்பற்ற ஓர் வடிவமாகத் திரண்டு எழும்பிய முகம்மது.
4280.
இன்ன தன்மையோ ருறையுழை மதீனத்தி னேகிப்
பொன்னந் தாமரை யிணையடி சிரசின்மேற் பூட்டிக்
கன்னல் போன்மொழித் திருக்கலி மாவுரை கழற
லன்ன தேகருத் தன்னதே யழகென வறைந்தான்.
103
(இ-ள்) இவ்விதத் தன்மையை
யுடையவரான அந்த முகம்ம தென்பவரிருக்கின்ற இடமாகிய திருமதீனமா நகரத்தின்கண் சென்று இலக்குமியானவள்
வீற்றிருக்கும் அழகிய தாமரை மலரை நிகர்த்த இருபாதங்களையுந் தலையின் மீது தரித்துப் பணிந்து
|