பக்கம் எண் :

சீறாப்புராணம்

158


முதற்பாகம்
 

     367. ஆரிது மனையிற் சிலதுருச் சொம்முண்

             டறக்கிழ டொடுசொறி மட்டுஞ்

        சோரியில் வரடும் வங்குமா யிருந்த

             துருவைகண் முதுகினிற் றிரமா

        வாரணிந் திலங்கு மணிமுலை யலிமா

             முகம்மது திருமலர்க் கரத்தாற்

        சீருறத் தடவ விக்கினஞ் சிதைந்து

             செவ்விபெற் றிலங்கிய வன்றே.

77

     (இ-ள்) ஆரிதென்பவர்களின் வீட்டில் சில செம்மறியாட்டுகளின் ஆஸ்திகளுள்ளன. முழுக்கிழடுடன் தினவும் மலடும் சோரியில் வரடும் வங்குமாயிருந்த அச்செம்மறியாடுகளின் முதுகினில் கச்சணிந்துப் பிரகாசியா நிற்கும் அழகிய கொங்கைகளையுடைய ஹலிமா அவர்கள் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களின் தெய்வீகம் பொருந்திய தாமரை மலர் போலுங் கைகளினால் சிறப்பு பொருந்தும்படி உறுதியாத் தடவ அவைகளுக் கிருந்த இடையூறானவை ஒழிந்து அழகுபெற்று விளங்கின.

 

     368. வாலசைத் திடாத கிழடிள வுருவாய்

             வரடுவங் கறமல டும்போய்ச்

        சாலவும் பருத்திட் டுடறிரண் டழகாய்த்

             தளதளத் தணிமயி ரொழுக்காய்ச்

        சூலுமாய்ச் சிறிது பாலுமாய் முலைக்கண்

             சுரப்பெடுத் தறச்சொரிந் திடலா

        யேலவார் குழலார் மனையிடங் கொள்ளா

             திருந்தது பறழ்களு நிறைந்தே.

78

     (இ-ள்) அன்றியும், வாலையசைப்பதற் கேலாத அக்கிழட்டுச் செம்மறிகள் இளம்பருவத்தை யுடைய வடிவமாகிய வரடும் வங்குமொழியும்படி மலடானது நீங்கி மிகவும் பருத்துச் சரீரம் திரட்சியுற்று அழகாய்ப் பிரகாசித்து சிறந்த உரோமங்கள் ஒழுங்காய் முளைக்கப் பெற்றுச் சிலவைகள் சினையுள்ளனவாகியும் சிலவைகள் கன்றுகளை யீன்று பாலுள்ளனவாகியும் பாலானது முலைக் கண்வழியாய் ஊற்றெடுத்து மிகவுஞ் சிந்தும்படியாகியும் வாசனை பொருந்திய நெடிய கூந்தலையுடைய ஹலிமா அவர்களின் வீட்டினது இடங்கொள்ளாமற் குட்டிகளும் பெருகியிருந்தன.

 

      369. ஓங்கிய குனையி னெனும்பதி தன்னி

             லுறைபவ ரெவர்மனைக் கேனு