பக்கம் எண் :

சீறாப்புராணம்

1739


இரண்டாம் பாகம்
 

கவுலத்தை விட்டுக் கூட்டின படலம்

 

அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

 

4781. விள்ளரும் பிணியு நீங்கி வெற்பெனப் புயங்கள் பாரித்

      துள்ளமும் வியப்ப தாகி யுற்றவ னிருப்ப விப்பாற்

      றெள்ளிய மறையு ளாய திருநபி முகம்ம தென்னும்

      வள்ளல்தீ னோர்கள் போற்ற மகிழ்ந்தினி திருக்கு நாளில்.

1

     (இ-ள்) அந்த மேக நோயையுடையவன் சொல்லுவதற் கருமையான நோயுமகன்று மலைகளைப் போலுந் தோள்கள் பருத்து மனமும் ஆச்சரியமாகிப் பொருந்தி இருக்க, இதன் பின்னர்த் தெளித்த புறுக்கானுல் மஜீதென்னும் வேதத்தினுள்ளாகிய தெய்வீகந் தங்கிய நமது நாயகம் எம்மறைக்குந் தாயகம், நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மென்று சொல்லும் வள்ளலானவர்கள் தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம்மார்க்கத்தையுடைய முஸ்லிங்கள் துதிக்கும் வண்ணஞ் சந்தோஷித்து இனிமையோடு மிருக்கின்ற காலத்தில்.

 

4782. வானிடை கிராணந் தீண்ட முகம்மது நயினார் கண்டு

     தீனவர் குழுக்கொண் டீண்டச் சென்றுபள் ளியின்வாய் நண்ணி

     யூனமி லொளியாய் வேதத் துள்ளுறைப் பொருளா யெங்குந்

     தானென நின்ற கக்கன் றன்னையே தொழுது நின்றார்.

2

     (இ-ள்) வானத்தின் கண் கிரகணமானது பிடிக்க, அதை நயினாரான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் குறைஷிய்யா காத்திமுல் அன்பியா அஹ்மது முஜ்தபா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் பார்த்துத் தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம்மார்க்கத்தை யுடைய அசுஹாபிமார்கள் கூட்டங் கொண்டு செறியும் வண்ணம் போய்ப் பள்ளிவாயிலினிடத்து நெருங்கிக் களங்கமற்ற சோதியாய் வேதங்களின் உள்ளுறைப் பொருளாகி எவ்விடத்துந் தானென்று சொல்லும்படி நின்ற ஹக்கு சுபுகானகுவத்த ஆலாவைத் தொழுது நின்றார்கள்.

 

4783. தொழுதபி னவரை நோக்கித் துனிமிகுந் துலக மெல்லா

      மழையற வறந்த போதும் வானகத் துதித்தெந் நாளுங்

      கிழமைசேர் சுடர்கட் குற்ற கிராணகா லத்து மிக்காய்ப்

      பழுதிலா தவனை நோக்கிப் பண்புடன் றொழுமி னென்றார்.

3