பக்கம் எண் :

சீறாப்புராணம்

1740


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) அவ்வாறு தொழுதபிற்பாடு அந்த அசுஹாபிமார்களைப் பார்த்து நீங்கள் துன்பமானது அதிகரித்து இப்பூலோக முழுவதும் மழையின்றிக் காய்ந்த காலத்திலும், வான லோகத்தின்கண் ணுதித்து எந்தக் காலத்திலுங் கிழமை பொருந்திய சந்திர சூரியர்களுக்குக் கிரகணஞ் சேர்ந்த காலத்திலும் யாவற்றிற்கும் மேலாய்க் களங்கமற்ற அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவைப் பார்த்து தகுதியோடுந் தொழுங்க ளென்று சொன்னார்கள்.

 

4784. அம்மொழி கேட்டெல் லோரு மகமகிழ்ந் திருக்கு நாளிற்

      செம்மையு மறிவு மிக்க வாயிசா வென்னுஞ் செல்வி

      மும்மையு முணர வல்ல முழுமதி யிறசூ லுல்லா

      தம்மைநீ ராட்டும் போதிற் சார்ந்தனள் கவுலத் தன்றே.

4

     (இ-ள்) அந்த வார்த்தையை அசுஹாபிமார்க ளியாவருங் கேள்வியுற்று மனமானது சந்தோஷிக்கப் பெற்று இருக்கின்ற காலத்தில், அழகும் அறிவு மதிகரித்த ஆயிஷா றலியல்லாகு அன்ஹாவென்று சொல்லு மிலக்குமியானவர்கள் வருங்காலம், நிகழ்காலம், செல்காலமென்னு முக்காலங்களையு மறிய வல்லமையையுடைய பூரணச்சந்திரனைப் போன்ற அல்லாஜல்ல ஜலாலகுவத்த ஆலாவின் றசூலாகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிது ஹாமிது அஹ்மது மஹ்மூது முகம்மது முஸ்தபா காத்திமுல் அன்பியா சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களை ஸ்நானஞ்செய்விக்கின்ற சமயத்திற் கவுலத்து றலியல்லாஹூ அன்ஹா அவர்கள் வந்து சேர்ந்தார்கள்.

 

4785. இறையவன் றூதே செல்வ மிலங்கிய கோவே வேத

      மறைபடாக் கொம்பே யென்ன வணங்கிவாய் புதைத்தொ துங்கிக்

      கறையற மாலிக் கீன்ற கவுலத்து யானென் றன்னை

      யறைகழல் சாமித் தீன்ற அவுசினுக் களித்தா ரன்றே.

5

     (இ-ள்) அவ்வாறு வந்து யாவருக்குங் கடவுளான அல்லாஜல்ல ஷகுனகுவத்த ஆலாவின் றசூலானவர்களே! செல்வமானது விளங்கப் பெற்ற அரசரானவர்களே! புறுக்கானுல் அலீமென்னும் வேதமானது மறையாத கொம்பானவர்களே! யென்று பணிந்து வாயைப் பொத்தி விலகி யான் மாலிக்கென்பவர் களங்கமறும் வண்ணம் பெற்ற கவுலத்தென்பவளென்று சொல்லி என்னை அவர் சத்திக்கின்ற வீரக்கழலைத் தரித்த ஸாமித்தென்பவர் பெற்ற அவுசென்பவருக்கு விவாகஞ் செய்து கொடுத்தார்.

 

4786. இளமையு மெழிலுஞ் செல்வத் தியற்கையுங் கிளையு மிக்க

      வளமையு முற்று மேனாண் மகிழ்ந்தினி திருந்தோ மன்பா

      யுளமகிழ் தனையர் தோன்றி யுரியவா லிபமு மாறி

      யளவிடற் கரிய வாழ்வு மழிந்திட மெலிந்த பின்னர்.

6