பக்கம் எண் :

சீறாப்புராணம்

211


முதற்பாகம்
 

514. இனத்துளார் தங்கடம் மிதயத் துள்ளியிர்ப்

    புனக்கொடி துன்புறப் புந்தி கூர்தர

    நினைத்தநன் மொழிபல நிகழ்த்திப் பங்கய

    நனைத்தட மக்கமா நகர்க்க னுப்பினார்.

33

     (இ-ள்) அப்போது பந்துக்க ளனைவரும் தங்களது மனசினுட் பொருந்திய உயிராகிய கொல்லைகளினிற்கும் கொடியான ஆமினா அவர்களுக்கு வருத்தமொழியும்படியாகவும், அறிவானது மிருக்கும் படியாகவும், தங்கள் சிந்தையின்கண் எண்ணிய நன்மையான பலவித வார்த்தைகளைச் சொல்லித் தாமரை மலர்களின் தேனையுடைய தடங்கள் சூழ்ந்த திருமக்கமா நகரத்திற்குப் போகும்படி அனுப்பி வைத்தார்கள்.

 

     515. விட்டொளிர் விளங்குமி னாமி னாநறுங்

        கட்டழ ககுமதை நடத்திக் கள்ளறா

        வட்டிலை முள்ளரை வனச வாவியு

        நெட்டிலை முளிக்கழைக் காடு நீந்தினார்

34

     (இ-ள்) அவ்வாறு அனுப்பவே, பிரகாசத்தை விட்டு ஒளிரா நிற்கும் மின்னைப் போன்ற ஆமினா அவர்கள் வாசனை தங்கிய பெரிய அழகையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களை நடத்திக் கொண்டுத் தேனானது ஒழியாத வட்டவடிவு பெற்ற இலைகளையும் முள்ளினது அரையையுமுடைய தாமரைத் தடாகங்களையும் நெடிய இலைகளையும் குளசுகளையுமுடையக் கருப்பங் கொல்லைகளையும் கடந்து சென்றார்கள்.

 

     516. கொடியிடை யாமினா வென்னுங் கோதையோர்

        பிடியென வனமெலாம் பெருக மான்மதக்

        கடிகமழ் முகம்மதோர் கன்றும் போலவே

        யடவிவிட் டகன்றபு வாவி லாயினார்.

   35

     (இ-ள்) அங்ஙனம் சென்ற கொடியினை நிகர்த்த இடையினையுடைய ஆமினாவென்று சொல்லும் பூமாலையணிந்த கூந்தலையுடையவர் ஒப்பற்ற பெண் யானை போலவும், அவ்விடம் முழுவதும் பெருகும்படி கஸ்தூரி வாசனையானது பரிமளியா நிற்கும் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்கள் இணையில்லாத அவ்யானையின் குட்டியைப் போலவும், அக்காட்டை விட்டும் நீங்கி அபுவாவென்னும் சிற்றூரில் போய்ச் சேர்ந்தார்கள்.