முதற்பாகம்
பின்னர் அழகானதை
சுமக்கப் பெற்ற ஆமினா அவர்களின் பந்து ஜனங்களும் மற்றும் தோழிமார்களும் தங்கள் தங்களின்
மனசின் கண்ணுள்ள சிந்தனையைச் சொல்ல ஆரம்பித்தார்கள்.
511.
நபியெனு
மொருவர்பின் னாளிற் றோன்றியிப்
புவியிடை வருவரென்
றோதிப் போந்தவ
ரிவரெனக் குறித்தன
ரினியிவ் வூரிடைக்
கவர்மனக்
காபிர்கள் கொடியர் காணென்றார்.
30
(இ-ள்)
முன்னுள்ள பண்டிதர்கள் நபியென்று சொல்லும் ஒருவர் இப்பூமியின்கண் பிற்காலத்தில் பிரசன்னமாகி
வருவாரென்று கூறிப் போன அந்நபி இந்த முகம்மதுதானென்று யாவர்களும் மனசின்கண் குறிப்பிட்டார்கள்
ஆதலால் இனிமேல் இந்நகரத்தின் கண்ணுள்ள திருட்டு மனசையுடைய காபிர்கள் கொடுமை தங்கியவர்களென்று
சொன்னார்கள்.
512.
குருத்திறன் முகம்மதைக்
குடியிவ் வூரிடை
யிருத்துதல் பழுதுநம்
மினத்த ரியாவர்க்கும்
பொருத்தமில் லெனமனம்
புழுங்கித் தங்குலத்
திருத்திழை யாமினா
வறியச் செப்பினார்.
31
(இ-ள்)
அன்றியும், இந்தத் திருமதீனமா நகரத்தின்கண் குருத்துவத்தையுடைய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல
மவர்களைக் குடியாக விருத்தி வைத்தல் குற்றம். அப்படி இருத்திவைப்பது நமது குடும்ப ஜனங்கள்
அனைவருக்கும் சம்மதமுமில்லையென்று மனமானது புழுக்கமுற்று தங்களது கூட்டத்திலுள்ள செவ்வையான
ஆபரணங்களையுடைய ஆமினா அவர்கள் உணரும்படி சொன்னார்கள்.
513.
தம்பியர் தனையர்சொற்
கேட்டுத் தன்னுளம்
வெம்பியே யாமினா
மிகவி சாரமிட்
டம்பினை யடர்ந்தகண்
ணாலி சிந்திட
நம்பியை நோக்கித்தன்
னகரை நாடினார்.
32
(இ-ள்)
ஆமினா அவர்கள் அவ்வாறு தம்பிமாரும் தமையன்மாரும் சொல்லிய வார்த்தைகளைக் காதுகளினாற்
கேள்வியுற்றுத் தங்கள் மனமானது வாடி அதிகக் கவலை வைத்து அம்பையுந் தமக்கிணையில்லை யென்றுசொல்லி
யடர்ந்த கண்களிலிருந்து மழைபோலும் நீரானது சொரியும்படி புருடரிற் சிறந்தோரான நபிமுகம்மது
சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களைப் பார்த்துத் தங்களது நகரமாகிய மக்காப்பதியை மனசின்கண்
விரும்பினார்கள்.
|