பக்கம் எண் :

சீறாப்புராணம்

298


முதற்பாகம்
 

அக்கினிப் பொறிகளைக் கக்கவும், வெண்மை நிறத்தைத் தரித்தபற்கள் பிரகாசித்திடவும், வாயில் புலால்நாற்றம் கமழவுமாகிய இவ்விதம் முட்கள் நெருங்கிய அந்தவனத்தின்கண் கோபத்தோடும் இருக்கும்.

 

757. நிரம்பும் வள்ளுகிர் மடங்கலி னினங்களி னிணமுண்

    டிரும்ப னைக்கைமும் மதகரிக் கோட்டினை யீழ்த்திட்

    டுரம்பி ளந்துதி ரங்களை மாந்திநின் றுறங்கா

    தரும்பெ ருங்கிரி பிதிர்ந்திட வுருமினு மலறும்.

4

     (இ-ள்) அன்றியும், அப்புலியானது கூர்மை நிறையப் பெற்ற நகங்களையுடைய சிங்கக் கூட்டங்களின்றி மற்றமிருகங்களின் நிணங்களையருந்திப் பெரிய பனைபோலும் தும்பிக்கையினையும் மூன்று மதங்களையுமுடைய யானைகளின் கொம்புகளைப் பிடித்து இழுத்து அவைகளின் மார்பினைக் கீறி இரத்தங்களைக் குடித்து நித்திரை செய்யாது நின்று பெரிதான அரிய மலைகளும் சிதறிடும்படி இடியைப் பார்க்கிலும் அதிகமாக முழங்காநிற்கும்.

 

758. அதிர்ந்தி டுந்தொனி செவியுற வடவியி லடைந்த

    முதிர்ந்த மேதியுங் கவையடிக் கேழலு முழுதும்

    பொதிந்த மெய்மயி ரெண்கினங் களுமரைப் போத்தும்

    பதிந்த காறடு மாறிட வீழ்ந்துடல் பதைக்கும்.

5

     (இ-ள்) அன்றியும், அவ்வாறு முழங்கிடும் ஓசையானது காதுகளிற் பொருந்தவே அக்காட்டின்கண் போய்ச் சேர்ந்த முற்றிய எருமைகளும் பிளந்தபாதங்களையுடைய பன்றிகளும் உரோமங்களினால் அடங்கலு மூடப்பட்ட சரீரத்தையுடைய கரடிகளும் கலைமான்களும் பூமியின்கண் பதியப்பெற்ற தங்களது கால்கள் தடுமாற்றமுற்று விழுந்து தேகநடுக்கமடையும்.

 

759. புறத்த யங்குமஞ் சிறையறு பதப்பொறிச் சுரும்பு

    திறந்து தேனையுண் டணிதிகழ் தொடையணி திறலோய்

    மறந்த யங்குவேன் மாந்தரவ் வேங்கையின் வாய்ப்பட்

    டிறந்த தன்றியொட் டகம்பரி யெண்ணிலக் கிலையே.

6

     (இ-ள்) வெளியிற் பிரகாசியாநிற்கும் அழகிய சிறகுகளையும் ஆறுகாற்களையும் புள்ளிகளையுமுடைய வண்டினங்கள் மலர்களைத் திறந்து அதனுள்ளிருக்கும் தேனையருந்தி அழகு விளங்குகின்ற மாலையணிந்த வெற்றியையுடைய நபிகள் பெருமானே! அந்தப் புலியினது வாயிற்பட்டுக் கொலைகள் தயங்காநின்ற வேற்படைதாங்கிய வேந்தர்கள் மாண்டது மாத்திரமல்லாமல் மாண்டுபோன ஒட்டகம் குதிரை முதலியவைகளின் கணக்கிற்குக் குறிப்பில்லை.