பக்கம் எண் :

சீறாப்புராணம்

330


முதற்பாகம்

      (இ-ள்) அவ்வாறு நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் கண்ட சொப்பனத்தின் சமாச்சாரத்தை அங்குற்ற ஒவ்வொருவருக்குஞ் சொல்லிக் காட்டிடுந் தருணத்தில் சூரியன் கீழ்த்திசையின்கண் உதயமாயினான். ஆறானது சுழிகளைக் கிளப்பி அந்தக் காடு முழுவதையும் பிளந்தெடுத்து இருகரைகளிலும் மிகுதியாக வடிந்து கூட்டமாகிய முத்துக்களையுடைய சமுத்திரத்தினது வயிற்றினிடத்தை நிறைத்தது.

 

847. இருந்த பேரனை வருமெழுந் திருநதிக் கரையிற்

    பொருந்தி நன்னெறி யீதென நடக்குமப் போதில்

    வருந்திக் கள்வரு மறுகரை யிடத்தினின் மறுகித்

    திருந்த நோக்கினுங் காண்கிலா தெழுந்தன திரைகள்.

7

     (இ-ள்) அப்போது அங்கு தங்கியிருந்த ஜனங்களியாவர்களும் எழும்பி அந்தப் பெரிய ஆற்றினது கரையின்கண் போய்ச் சேர்ந்து இஃது நல்ல பாதையென்று சொல்லி நடக்குகின்ற அத்தருணத்தில் திருடர்களும் வருத்தமுற்று மனங்குழம்பி மற்றக் கரையின்கண் வந்து நின்றுச் செவ்வையாக இவர்களைப் பார்த்தாலும் அவர்களாற் பார்க்க முடியாமல் அலைகளெழும்பின.

 

848. ஆறு வந்தது புதுமைகொ லெனவதி சயித்து

    மாறு கொண்டவர் திரண்டொரு பெருவரை முகட்டி

    லேறி நின்றுதே சிகர்தமை நோக்கலு மெழுந்து

    மீறி வெண்டிரை புரட்டிமீக் கொண்டது வெள்ளம்

8

     (இ-ள்) அவ்வாறு எழும்பவே விரோதத்தைக் கொண்டவர்களான அத்திருடர்களனைவரும் ஒன்று சேர்ந்து நூதனமாய் இடையில் இந்த ஆறானது வந்து குறுக்கிட்டது அற்புதந்தானென்று சொல்லி மனத்தின்கண் ஆச்சரியப்பட்டுப் பெரிதான ஒரு மலையினது உச்சியில் ஏறி நின்றுகொண்டு தேசாந்தரியாகிய இவ்வியாபாரிகளைப் பார்த்த மாத்திரத்தில் அவ்வாற்றினது வெள்ளமானது எழும்பி அதிகரித்து வெள்ளிய அலைகளைப் புரளச் செய்து மேலாயுயர்ந்தது.

 

849. கள்ளர் வந்தவ ணிருந்தன ரெனக்கெடி கலங்கி

    யுள்ள நொந்தனம் முகம்மதிங் குறுபொருட் டதனால்

    வெள்ளம் வந்தது மறித்தது காணென வியந்து

    வள்ள லைப்புகழ்ந் தார்வழி நடந்தனர் வசிகர்.

9

     (இ-ள்) அப்போது வசிகராகிய அவ்வியாபாரிக ளனைவரும் நாம் அவ்விடத்தில் திருடர்கள் வந்திருந்தார்களென்று சொல்லி மிகப் பயந்து மனம் வருந்தினோம். ஆனால் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் இவ்விடத்திலுற்ற