முதற்பாகம்
கரம்பொருத்து படலம்
கலிவிருத்தம்
901.
மறங்கிளர் வேற்கர
வள்ளன் மக்கிக
ளிறங்கிய விடுதிபுக்
கிருக்குங் காலையிற்
கறங்கிய சாமினிற்
காபி ரிற்சில
ரறங்கிளர் நபியைவந்
தடுத்து நோக்கினார்.
1
(இ-ள்)
கொலைகளானவை யோங்கா நிற்கும் வேலாயுதம் தாங்கிய கையினையுடைய வள்ளலான நமது நாயகம் நபிமுகம்மது
முஸ்தபாறசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் மக்கமாநகரத்தை யுடையவர்களான மற்றும்
வியாபாரிகளும் தாங்களிறங்கிய தத்தம் விடுதியின்கண் புகுந்து இருக்கின்ற சமயத்தில், முரசினங்களானவை
ஒலிக்கப் பெற்ற அந்தஷாம் தேசத்திலுள்ள காபிர்களாகிய சூதர்களில் சில பேர்கள் தருமமானது
அதிகரித்த அந்நபிகள் பெருமானாரவர்கள் இராநின்ற இடத்தை வந்துச் சமீபித்து அவர்களைத் தங்களது
கண்களினாற் பார்த்தார்கள்.
902.
மேனியிற் கதிர்விரி
வியப்பு மெய்யினின்
மான்மதங் கமழ்தலும்
வடிந்த கைகளுந்
தூநிறை மதியென முகமுந்
தோள்களுங்
கானிலந் தோய்தராக்
கார ணீகமும்.
2
(இ-ள்)
அவ்விதம் பார்க்கவே அந்நபிகணாயக மவர்களினது திருமேனியின்கண் பிரகாசக் கிரணங்கள் பரவப்
பெற்ற அதியசமும், காத்திரத்தின் கண் கஸ்தூரி வாசனை கமழ்வதும், நீட்சியுற்ற கைகளும், பரிசுத்தமான
பூரணச் சந்திரனைப் போன்ற முகமும், புயங்களும் காலைகளானவைப் பூமியின்கண் படியாத காரணீகமும்.
903.
பன்னருஞ் சிறப்புடை
யருட்கட் பார்வையு
மன்னிய வவயவத் தழகு
மாசிலா
நன்னிலை மொழிபல
நவிற்றுஞ் செய்கையு
மின்னன பலவுங்கண்
டேகி னாரரோ.
3
|