முதற்பாகம்
(இ-ள்)
சொல்லுதற்கரிய வரிசை தங்கிய காருண்ய விழிகளினது பார்வையும், உறுப்புகளிற் பொருந்திய அழகும்,
குற்றமற்ற நல்லநிலைமையினையுடைய பலவித வார்த்தைகளைப் பேசும் ஒழுக்கமுமாகிய இப்படிப்பட்ட
பலவகைகளையும் அக்காபிர்களாகிய சூதர்கள் பார்த்துக் கொண்டுத் தங்களிருப்பிடத்திற்குத் திரும்பிப்
போயினார்கள்.
904.
கண்டவர் காண்கிலாக்
கார ணீகமொன்
றுண்டென நகரவர்க்
குரைப்பக் கேட்டவர்
விண்டவர் விளங்கிட
வேதம் பேசிய
கொண்டலங் கவிகையா
ரென்னக் கூறினார்.
4
(இ-ள்)
அவ்வாறு போய் நபிகணாயகத்தைப் பார்த்த சூதர்களாகிய அக்காபிர்கள் நாம் ஒரு காலத்திலும்
காணாத காரணீகமானது ஒன்றுள்ளதென்று அந்த ஷாம்தேசத்திலுள்ள மற்றும் பேர்களுக்குக் கூற அதைக்
காதுகளினாற் கேள்வியுற்றவர்கள் தங்களோடு வந்து கூறிய அவர்கள் விளங்கிடும்படி ஆங்கு வந்து
விடுதியிட்டுறைந் திருக்கும் அவர்கள் முன்னுள்ள வேதங்கள் சொல்லிய அழகிய மேகக்குடையையுடைய
நபிமுகம்மதா யிருக்குமென்று பதில் சொன்னார்கள்.
905.
மறைதெரி சமயமு நமரு
மாய்ந்திட
வுறைகுவ னொருவனுண்
டணித்தென் றோதுநூற்
றுறைவல்லார் நாடொறுஞ்
சொற்ற சொற்படி
பிறவியா னிவனெனப்
பின்னும் பேசினார்.
5
(இ-ள்)
அன்றியும், வேதங்களானவை தெரிக்கா நிற்கும் நமது மார்க்கமும் நமது பந்துக்களும் மாண்டு
போகும்படி சமீபமாய் இப்பூமியின்கண் வந்து தங்கக்கூடியவ னொருவனுண்டென்று கூறா நின்ற வேதநூற்களின்
துறைகண்ட வல்லவர்களான பண்டிதர்கள் பிரதிதினமும் சொல்லிய சொல்லின் வண்ணம் பிறந்து வந்த
பிறவியை யுடையவன் இந்த முகம்மது தானென்று மறுத்துஞ் சொன்னார்கள்.
906.
தருபெரும் பதவியிச்
சமயம் பாழ்பட
வருபவன் றன்னுயிர்
வானி லேறிடக்
குருதிநீர் சிந்திடக்
குவல யத்திடைச்
செருவிளைத் திடுதலே
திறமென் றோதினார்.
6
(இ-ள்)
அன்றியும், பெரிய மோட்ச பதவியைத் தராநிற்கும் இந்த நமது மார்க்கமானது பாழாகும் வண்ணம்
வந்த அந்த முகம்மதென்பவனின் ஆவியானது ஆகாயத்தி னுட்போய்
|