பக்கம் எண் :

சீறாப்புராணம்

495


முதற்பாகம்
 

1287. ஓது மென்றசொற் கேட்டலு மோதின னலனென்

     றோத முன்னிருந் திருகையி னிறுக்கிமுன் னுரைபோ

     லோது மென்றலும் பின்னரு மோதின னலனென்

     றோத மற்றுமென் றனைமிக விறுக்கின ருரத்தின்.

47

      (இ-ள்) அவர் அவ்விதம் ஓதுங்களென்று சொல்லிய வார்த்தையைக் கேட்ட மாத்திரத்தில் யான் ஓதினவனல்லேனென்று சொல்ல, அவர் எனது முன்னாக இருந்து அவரின் இருகைகளினாலும் என்னைக் கட்டியிறுக்கி முன்னர் சொன்ன வார்த்தையைப் போல ஓதுங்களென்று சொல்லவும், பின்னரும் யான் ஓதினவனல்லேனென்று சொல்லப் பின்னரும் என்னை வலிமையோடு அதிகமாகக் கட்டியிறுக்கி.

 

1288. மறுத்து மோதுமென் றுரைத்திட மறுத்தனன் மறுத்து

     மிறுக்கி யோதுமென் றுரைத்தன ரெதிரிருந் தெளியேன்

     றிறக்க வோதுவ தெவையென வுரைத்தனன் றீட்டா

     தறத்தி னுட்படுஞ் சொல்லினைக் குறித்தெடுத் தறைந்தார்.

48

      (இ-ள்) மறுத்தும் என்னை ஓதுங்களென்று சொல்ல அதற்கு யான் மறுத்துச் சொன்னேன்; பின்னருங் கட்டியிறுக்கி யோதுங்களென்று சொன்னார். அப்போது எதிராக இருந்து கொண்டு எளியேனாகிய யான் வலிமையுடன் ஓதுவது யாது? என்று கேட்டேன். னுழுதாத அறத்தினுட்படும் வார்த்தைகளைக் குறித்து எடுத்துச் சொன்னார்.

 

1289. அந்த நல்லுரை கேட்டன னவருரைப் படியே

     பிந்தி டாதெடுத் தோதினன் செழும்பொருள் பிறக்க

     வெந்தை யீரெனப் போற்றிவிண் ணடைந்தன ரெழிலோய்

     வந்த வாறிவை யெனவெடுத் துரைத்தனர் வள்ளல்.

49

      (இ-ள்) அவர் அவ்வாறு சொன்ன அந்த நன்மை பொருந்திய வார்த்தைகளை யான் எனது காதுகளினாற் கேள்வியுற்றேன். அவரின் சொற்படி செழிய பொருளானது தோற்றும் வண்ணம் பிந்தாது எடுத்து ஓதினேன் ஓதவே, எனது தந்தையரான முகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களே! என்று சொல்லிப் புகழ்ந்து ஆகாயலோகம் போய்ச் சேர்ந்தார். அழகையுடைய உறக்கத்தே, வந்து பொருந்திய வரலாறு இவைதானென்று வள்ளலாகிய நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் எடுத்துச் சொன்னார்கள்.

 

1290. புவியி னிற்பெரும் புதுமைய தாகிய பொருளாய்

     நபியு ரைத்தசொ லனைத்தையு மனத்தினி னயந்து

     குவித ருங்கதிர்ச் செழுமணிக் கொடியிடைக் கதீசா

     செவிகு ளிர்ந்திட மனங்களித் திடப்பொரு டெரிவான்.

50