பக்கம் எண் :

சீறாப்புராணம்

572


முதற்பாகம்
 

1509. பதிக்கு நம்மினத் தவர்க்குநல் வழிக்குமுட் பகையா

     யுதிக்கும் பாதகர் போனபி முகம்மதென் றுதித்தான்

     சதிக்கும் வஞ்சனைத் தறுகண னிவன்றனைப் பொருளா

     மதிக்க வேண்டுவ திலையினி வதைத்திட வேண்டும்.

7

      (இ-ள்) நமது இராஜ்யத்திற்கும் குடும்பத்திற்கும் நல்ல மார்க்கத்திற்கும் உள்விரோதமாகத் தோற்றமாகிய துரோகர்களைப் போல முகம்மது நபியென்று சொல்லித் தோற்றமாயினான், சதிவு செய்யும் வஞ்சகத்தையுடைய குரூரனாகிய இவனை இனி நாம் ஒரு பொருளாக மதிக்க வேண்டியதில்லை. கொல்ல வேண்டும்.

 

1510. உதிரஞ் சிந்திட முகம்மதி னுயிர்செகுத் தவர்க்கென்

     பதியி னுற்றதெப் பொருளுள தப்பொருள் பலவு

     நிதியு மீய்குவ னெனக்கர செனநிகழ்த் திடுவ

     னெதிரும் வீரர்க ளுளரெவ ரெனவெடுத் திசைத்தான்.

8

      (இ-ள்) இரத்தமானது சொரியும் வண்ணம் முகம்மதென்பவனுடைய ஜீவனை யழித்தவர்களுக்கு எனது இராஜ்யத்திற் பொருந்தியதான எவ்வஸ்து உள்ளதோ அந்த வஸ்துவுகள் பலவும் திரவியமும் கொடுப்பேன். அன்றியும், எனக்கு அரசென்றும் சொல்லுவேன். ஆதலால் இங்கு உள்ளவர்களில் அவ்வாறு எதிர்க்கப்பட்ட வீரர்கள் யாவர்களென்று எடுத்துக் கூறினான்.

 

1511. மானம் போக்கிய கொடுங்கொலை விளைத்திடு மனத்தா

     னீன னிவ்வுரை பகர்தலு மவையகத் திருந்தோ

     ரான திவ்வுரை தீங்கிவை யெனவுரை யாடா

     தூன ருந்திய வேனுழை பவரையொத் திருந்தார்.

9

      (இ-ள்) அபிமானத்தை விட்ட கொடிய கொலைத் தொழிலைச் செய்திடும் மனத்தை யுடையவனான கீழ்மை கொண்ட அபூஜகிலென்பவன் இந்த வார்த்தைகளைச் சொல்லிய மாத்திரத்தில் அந்தச் சபையின்கண் இருந்தவர்கள் இவ்வார்த்தை ஆகுமானது. இவ்வார்த்தைகள் குற்றமென்று யாதொன்றும் பேசாது ஊனுண்ட வேலாயுதம் புகுந்தவர்களை நிகர்த்திருந்தார்கள்.

 

1512. வெற்றி வீரத்தின் மிக்கவ ரெவரென விரித்துச்

     சொற்ற திற்கடு வெகுளியுற் றிருவிழி சுழல

     வுற்று நோக்கிவெற் பகிர்த்திடு முறுவலிப் புயங்க

     ளிற்ற தோவென வவைவெரு விடவும றிசைத்தார்.

10

      (இ-ள்) விஜயத்தைக் கொண்ட வீரத்தினால் மிகுந்தவர்கள் யாவர்களென்று அபூஜகிலென்பவன் கேட்டதற்கு உமரென்பவர் கடுமையான கோபமடைந்து இரண்டு கண்களும் சுழலும்